tamilnadu

திருப்பரங்குன்றத்தில் பேரணி நடத்த அனுமதி கோரிய மனு நீதிமன்றம் தள்ளுபடி

திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் இருந்து பேரணி நடத்து வதற்கு அனுமதி கோரிய மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த சையது ராஜா என்பவர், “உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்ஹாவில் வழக்கமான முறையில் அனைத்து சமுதாய மக்களும் ஒன்றி ணைந்து வழிபாடு நடத்துவதற்கு இடையூறு செய்பவர்களை எதிர்த்து திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் இருந்து பேரணியாக திருப்பரங்குன்றம்  பேருந்து நிலையம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரி யிருந்தார்.  இந்த வழக்கின் மீதான விசாரணை வியாழனன்று நீதிபதி தனபால் முன்பு நடைபெற்றது.

அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் குற்ற வியல் வழக்கறிஞர் அன்புநிதி ஆஜராகி, “திருப்பரங்குன்றம் விவ காரத்தில் மத மோதல்களை தூண்டும் வகையில் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது” என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  கடந்த வாரம் சில இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பேசப்பட்டுள்ளது.  குறிப்பாக  திருப்பரங்குன்றம் பகுதி மக்கள் மிகவும் அமைதியான முறையில் வழிபாடுகளை செய்து  வருகின்றனர். ஆனால் சம்பந்த மில்லாமல் இயக்கங்கள், கட்சிகள் உள்ளே புகுந்து தொடர்ந்து பிரச்சனை களை எழுப்பி வருகின்றனர். மேலும், அந்த பகுதி மக்கள் அனைத்து தரப்பினரும் இணைந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி போராட்டம் ஆர்ப்பாட்டங்கள் தேவையற்றது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

\இந்நிலையில் இவர்கள் போராட்டம் தேவையற்றது. மேலும் திருப்பரங்குன்றம் கோவில், தர்ஹா  விவகாரத்தில் இதுவரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி, “சட்டம் - ஒழுங்கு பிரச்சனைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு போராட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியாது. மேலும் பொதுமக்கள் நலன் கருதியும் சட்டம் - ஒழுங்கை கருத்தில் கொண்டும் காவல்துறை அனுமதி மறுத்தது சரியே!” என்று கூறி சையது ராஜாவின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.