tamilnadu

‘பொங்கல் தொகுப்பு’ நாளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜன. 2 - தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்குவதை ஜன.4 அன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய துணிப்பை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததும், டோக்கனில் குறிப்பிட்டுள்ளபடி அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதன்படி 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.