tamilnadu

img

பத்து சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தக்கோரும் வழக்கு

மதுரை:
தமிழகத்தில், மத்திய அரசின் பத்து சதவீத  இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்திய பிறகு, அதனடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், இந்திய மருத்துவக்கழகத்தின் செயலர்,  சுகாதாரத்துறை  செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் இளஞ்சிறையைச் சேர்ந்தவர் கிருஷ்ண நாயர்  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், “ பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு வேலை வாய்ப்பு ,கல்வி ஆகியவற்றில் பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வு, முதற்கட்டமாக நாளை( ஜூலை 5) முதல் ஜூலை 12- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

நான், நீட் தேர்வில் 320 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளேன். நான்  முற்படுத்தப் பட்ட பிரிவில் வரும், நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த  பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்சாதியினருக்கு வேலை வாய்ப்பு, கல்வி ஆகியவற்றில் பத்து சதவீத இட ஒதுக்கீடு வழங்கும்  சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு இதுவரை எந்தவிதத் தகவலும் வரவில்லை. விசாரித்துப் பார்த்ததில் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு சட்டம் பின்பற்றவில்லை என தெரியவந்தது. ஆனால் பிற மாநிலங்களில் இந்திய மருத்துவக் கழகத்தின் அறிவுறுத்தலின் படி இந்த இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. தமிழகத்தில் இந்த முறை பின்பற்றப்படாததால் எனது மருத்துவக் கனவு சிதைந்துவிட்டது. எனவே மத்திய அரசின் பத்து சதவீத  இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்திய பிறகு, அதனடிப்படையில் மருத்துவ மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்” எனக்  கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இது குறித்து இந்திய மருத்து வக் கழகத்தின் செயலர், சுகாதாரத்துறை  செயலர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

;