tamilnadu

img

தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பி தமிழகம் இருக்கிறது: துரைமுருகன்

சென்னை,மார்ச் 21- தமிழகத்தில் ஆயிரம் ஆறுகள் இருந்தாலும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களை நம்பிதான் தமிழகம் இருக்கிறது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து அவர் பேசுகையில், “ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று பாரதி பாடியது போல், என்று முடியும் இந்த காவிரி போராட்டம்? என்ற வேதனையோடு மேகதாது அணைக்கு எதிராக தனித்தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்கள் ஒப்புதலுக்காக கொண்டு வருகிறேன்” என்றார். “அவதார்” கர்நாடக அரசுக்கும் நமது காவிரி உரிமைக்கான போராட்டம் நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது. முடியும் நிலை வரவில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அவதாரத்தை எடுக்கிறது. காவிரியில் வரும் தண்ணீர் தமிழகத்திற்கு உரிமை உண்டு என்ற ஒப்பந்தம் இருந்தாலும், ஒப்பந்தம் முடிந்து விட்டது என்று போராட்டத்தை துவக்கியது கர்நாடக அரசு. இல்லை என அதற்கான காரணத்தை கூறி நாம் அதை முறியடித்தோம்.  தண்ணீர் பிரச்சனையை தீர்க்க தீர்ப்பாயம் (டிரிப்யூனல்) அமைக்க முடிவும் செய்தோம். அதற்கும் தடைபோட்டார்கள். அதையும் முறியடித்தோம். இடைக்கால தீர்ப்புக்கும் தடைப்போட்டனர். அதையும் வென்றோம். பிறகு, ஆணையம் உருவாக்க வேண்டும் என்றோம். அதையும் தேவையில்லை என்றார்கள். அதையும் வென்று காட்டினோம். தீர்ப்பு வந்தது. அதை அரசிதழில் (கெஜட்டில்) வெளியிட மாட்டோம் என்றார்கள். போராடி அதையும் போட வைத்தோம். காவிரி ஆணையம், அதற்கான தலைவர்கள் என ஒவ்வொரு முறையும் போராடினோம்.  இந்த பிரச்சனை மகன், பேரன், கொள்ளுப்பேரன் என நீடிக்குமோ என வேதனையுடன் அவர் கேள்வி எழுப்பினார்.

மாற்றந்தாய் மனப்போக்கு...

உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்குப் பிறகு கூட அணைக் கட்டப் போகிறோம் என்கிறார்கள். இது புதிதல்ல, கர்நாடக முன்னாள் முதல்வர்  குண்டுராவ் கூட அணைக் கட்ட போகிறோம். யாரையும் கேட்க தேவையில்லை என்றார். அம்மாநிலத்தில் குமாரசாமி, எடியூரப்பா என எல்லோரும் ஒரே அணியில் இருக்கிறார்கள். அது காங்கிரஸாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் ஒரே நிலையில் இருக்கிறார்கள். அதேபோன்றுதான் ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும் சரி, இப்போது ஆட்சியிலுள்ள பாஜக அரசும் காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டிற்கு எதிராக மாற்றாந்தாய் மனநிலையில் ஒரே நிலைப்பாட்டில், ஒரே அணியில் இருக்கிறார்கள்.

கூட்டாட்சித் தத்துவம் எங்கே?

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆறுகள் இருந்தாலும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் நிலையே உள்ளது. கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் இயற்கையாக பொழியும் மழையால் நமக்கு கிடைத்து வரும் தண்ணீரையும் தடுத்து அணைக் கட்டுவோம் என்று கர்நாடக மாநில பாஜக அரசு சொல்கிறது. இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை முற்றிலும் மீறிய செயலாகும். ஒரு மாநில அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க மாட்டேன் என்று கூறுகிறது. அப்படியென்றால் எங்கே இருக்கிறது கூட்டாட்சித் தத்துவம் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பினார். காவிரி பிரச்சனையில்  தமிழ்நாடு சட்டப் பேரவைக்குள் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறோம். தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைக்கிறோம். இந்த விவகாரத்தில் யார் யோக்கியன் என்பதை இரண்டு கட்சிகளும் விட்டு விட வேண்டும். சில நேரங்களில் நீங்கள் எதிராக பேசியிருக்கலாம். நான்கூட சில நேரங்களில் தவறு செய்திருக்கிறேன். இவை அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் இப்பிரச்சனையில் ஒரே நேர் கோட்டில் ஒரே புள்ளியில் நிற்க வேண்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.