பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், தொழிற் சங்கத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் அடக்குமுறையை கையாண்ட பெரம்பலூர் காவல் துறையை கண்டித்தும் புதனன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து வட்டத்தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையொட்டி, திருச்சிரா ப்பள்ளி மாவட்டத்தில் அனைத்து வட்டக் கிளைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமை தாங்கினார். வட்டக்கிளைத் தலைவர் தலைவர் சுரேஷ்பாபு வரவேற்றார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் செந்தில் குமார் துவக்க உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் நவநீதன், தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் பொன் மாடசாமி, தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதிய சங்க நிர்வாகி பழனிச்சாமி உள்ளிட்ட மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். மாநிலத் துணைத் தலைவர் ஆ. பெரியசாமி நிறைவுறையாற்றினார். மாவட்ட இணைச்செயலாளர் பெரியசாமி நன்றி கூறினார். மேலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருவெறும்பூர் வட்டக்கிளை சார்பில், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டக்கிளைத் தலைவர் சந்திரா தலைமையில், திருச்சி 2 வட்டக் கிளையில் பல்துறை கட்டிடத்தில் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் அமுதவல்லி, முசிறி வட்டக்கிளையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமுதா தலைமையில், தொட்டியம் வட்டக்கிளையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஜெயக்கொடி தலைமையில், மணப்பாறை வட்டக்கிளையில் வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மாவட்ட துணைத் தலைவர் அல்போன்ஸ், வட்டக்கிளை நிர்வாகி முருகேசன் தலைமையில், துறையூர் வட்டக்கிளையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மணிமாறன் தலைமையில், லால்குடி வட்டக்கிளையில் லால்குடி வட்டாட்ச்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேஷ் பாபு, வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சங்கரநாராயணன் தலைமையிலும், திருவரங்கம் வட்டக்கிளையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், முன்பாக வட்டக்கிளை தலைவர் சசிகலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடைபெற்ற அராஜக நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தி கண்டனத்தை பதிவு செய்தனர். கும்பகோணம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்க வந்தவர்களை, நீண்ட நேரம் காக்க வைத்ததோடு, கோரிக்கை மனுவை பெற்றுக் கொள்ளாமல், மனுவை கசக்கி வீசி பெரம்பலூர் ஆட்சியர் உதாசீனப்படுத்தி உள்ளார். மேலும் மனு கொடுக்க வந்த நிர்வாகிகளை காவல்துறை மூலம் கைது நடவடிக்கை மேற்கொண்டு காவல் நிலையம் வரை அழைத்துச் சென்று அடக்கு முறையை மேற்கொண்டுள்ளார். இந்த செயலை கண்டிக்கும் விதமாக கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் செயலையும், அவருக்கு துணை புரிந்த காவல்துறையின் செயலையும் கண்டித்து, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் கிளைத் தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட இணைச் செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் பிரபாகரன் விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து துறை அரசு ஓய்வூதியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் கண்டன உரையாற்றினார். ஊரக வளர்ச்சித் துறை குமார் நன்றி தெரிவித்தார். பாபநாசம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில், பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் பிராங்கிளின், பாபநாசம் வட்டத் தலைவர் சரவணகுமார், ஊரக வளர்ச்சித் துறை வட்டத் தலைவர் ராஜா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் தமிழ்வாணன், வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.