tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

நீடித்த நிலையான வாழ்வியல் முறை கண்காட்சி

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வித் திட்டத்தின் கீழ், பசுமை அறக்கட்டளையுடன் இணைந்து நீடித்த நிலையான வாழ்வியல் முறை குறித்த கண்காட்சி புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் பொருட்கள், மாடித்தோட்டம் அமைத்தல், புதுப்பித்தக்க ஆற்றல் பயன்பாடு, காற்றுமாசு தவிர்த்தல் உள்ளிட்ட பொருண்மைகளில், தேசிய பசுமைப் படை மாணவர்கள் மாதிரிகளை அமைத்திருந்தனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் சோ. கணேசலிங்கம் தொடங்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் வேங்கடசுப்பிரமணியம், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ச. ரெங்கராஜு, பசுமை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் எம்எஸ்பி குழந்தைவேல், பசுமைத் தோழர் எஸ். ஜேரோலின் மேரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். பரிசளிப்பு  சிறந்த மாதிரிகளுக்கான முதல் பரிசாக செம்பாட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக இருதய மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.8 ஆயிரம், மூன்றாம் பரிசாக திருக்கோகர்ணம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.7 ஆயிரம், இரு ஆறுதல் பரிசுகளாக நற்சாந்துப்பட்டி ராமநாதன்செட்டியார் மேல்நிலைப் பள்ளி மற்றும் கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு தலா ரூ.5 ஆயிரமும் ரொக்கப் பரிசுகளாக வழங்கப்பட்டன.

மின்சார வயர்களை சுற்றி முளைத்துள்ள செடிகள்: அப்புறப்படுத்த வியாபாரிகள் கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி புதிய பேருந்துநிலைய வளாகத்தில், கடைகளுக்கு மின்சாரம் செல்லும் வயர்களைச் சுற்றி செடிகள் முளைத்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், செடிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பேராவூரணி புதிய பேருந்துநிலைய வளாகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு பேருந்துநிலைய மாடியிலிருந்து சர்வீஸ் வயர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்சாரம் செல்லும் வயர்களை சுற்றி செடிகள் முளைத்து வயர்களுடன் பின்னி, பிணைந்துள்ளதால் கடைகளுக்கு வரும் மின்சாரம் அடிக்கடி  தடைபடுகிறது. இரவு நேரங்களில் மின்சாரம் தடைபட்டால் அதை சரிசெய்ய உடனடியாக யாரும் கிடைக்காமல் மறுநாள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் குளிர்பானங்கள் மற்றும் பால் விற்பனை செய்யும் கடைக்காரர்களின் பொருட்கள் கெட்டு நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.  மேலும், நீண்ட நாட்களாக வயர்கள் பராமரிப்பின்றி உள்ளதால் அறுந்து கீழே விழும் நிலையில் உள்ளது. மழை பெய்யும் நேரங்களில் கடைகளின் சுவர்களில் மின்கசிவு ஏற்பட்டு ஷாக் அடிக்கிறது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக பேருந்து நிலைய மாடியில் மின் வயர்களை சுற்றிப் படர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தி, அறுந்து விழும் நிலையில் உள்ள வயர்களை புதிதாக மாற்றித்தர வேண்டும் என கடை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.