சென்னை, டிச. 12- வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தப்போ ராட்டத்திற்கு அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. வங்கி ஊழியர் இரண்டு நாள் (டிச. 16,17) வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரி வித்து மு.சண்முகம் எம்.பி. (தொமுச), ஜி.சுகுமாறன் (சிஐடியு), க.அ.ராஜா ஸ்ரீதர் (எச்எம்எஸ்), டி.எம்.மூர்த்தி (ஏஐடியுசி), டி.வி.சேவியர் (ஐஎன்டியூசி), வி.சிவகுமார் (ஏஐயுடியுசி), க.ஞானதேசிகன் (ஏஐசிசிடியூ), ஆர்.சம்பத் (டபிள்யுபிடியுசி), இரா.அந்திரி தாஸ் (எம்எல்எப்), ஏ.எஸ்.குமார் (எல்டியுசி), ஆர்.திருப்பதி (டியுசிசி) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது: பொதுத்துறை வங்கிகளை தனியாரிடம் வழங்க ஏதுவாக, வங்கிகள் சட்ட (திருத்த) மசோதாவை, நடப்பு குளிர்கால கூட்டத் தொடரி லேயே நாடாளுமன்றத்தில் மோடி அரசு வைக்கப் போகிறது. ஏற்கனவே சென்ற நிதி நிலை அறிக்கையில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தருவோம் என்று அறிவித்தார்கள். வங்கியில் வாங்கிய கடனை வேண்டுமென்றே திரும்பச் செலுத்தாத பெரிய நிறுவனங்கள் முன்பே இருந்தாலும் கூட, பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு திருப்பித் தராத கடன் தொகையும், வங்கி மோசடிகளும் பல மடங்குகள் அதிகரித்துவிட்டன.
13 நிறுவனங்கள் 4, 46,800 கோடி ரூபாயை கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் இருந்தன. இந்த கடனை அடைக்க இந்தியாவின் மிக ப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களான மிட்டல், ரிலையன்ஸ், டாட்டா, வேதாந்தா உள்ளிட்ட 9 நிறுவனங்கள் முன்வந்தன. கடன் தொகையை வங்கிகளிடம் பேரம் பேசிக் குறைத்து, வெறும் 1,61,720 கோடி ரூபாய்க்கு அந்த 13 நிறுவ னங்களின் மொத்தச் சொத்துக்களையும் வாங்கிக் கொண்டன. இதனால் 2 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் பெரு முதலாளிகளுக்கு லாபம்; பொதுத்துறை வங்கிகளுக்கு நட்டம். மோடி அரசாங்கம் கார்ப்பரேட் பணக்காரர்க ளிடம் இருந்து வங்கிகளின் பொதுச்சொத்தை வசூலிக்கும் லட்சணம் இதுதான். வங்கிகள் நட்டமடைய இந்த அரசே காரணமாக இருந்துவிட்டு, பின்னர் பொதுத்துறை வங்கிகள் நட்டத்தில் இயங்குகின்றன என பழி சுமத்துகிறது. இதுவரை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கடன் கொடுக்கச் செய்து, பிறகு கடனைத் தள்ளுபடி செய்த மோடி அரசு, இப்போது அந்த வங்கிகளையே கார்ப்பரேட்டுகளிடம் கொடுத்துவிட முடிவு செய்துள்ளது. இதுதான் ‘வங்கித் துறை சீர்தி ருத்தம்’ என்கிறார்கள்.
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களையும் “வேளாண்துறை சீர்திருத்தம்” என்று சொல்லித்தான் கொண்டு வந்தார்கள். தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத் தொகுப்புகளும் ‘தொழிலாளர் சீர்திருத்தம்’ என்ற பெயரில் தான் வந்துள்ளன. ஓராண்டு காலமானாலும் சளைக்காமல் விவசா யிகள் போராடி அந்த ‘சீர்திருத்தங்களை’திரும்பப் பெற வைத்திருக்கிறார்கள். பல நிதித்துறை வல்லுனர்களும், வங்கிகளை தனியார் மயமாக்கும் மோடி அரசின் கொள்கை தேசிய நலன்களுக்கு விரோதமானது என்று கூறுகிறார்கள். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், “பொதுத்துறை வங்கிகளை விற்பது மகத்தான தவறு” என்று சுட்டிக்காட்டி இருக்கிறார். 100 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான தொகையை பொதுத்துறை வங்கிகளில் நம்பிக்கையோடு மக்கள் போட்டு வைத்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகையை அப்படியே தூக்கி, வாங்கிய கடனைக் கூட கட்டாத கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அரசு ஒப்படைப்பது பொது மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதியாகும். வரும் டிசம்பர் 16, 17 தேதிகளில் அனைத்து வங்கிகளின் ஊழியர்களும், அதிகாரிகளும் தனியார்மயத்தை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் இறங்குகிறார்கள். தேச நலன், பொதுமக்கள் சொத்து ஆகியவற்றை பாதுகாக்கும் இப்போராட்டத்தை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரிக்கிறோம். முழு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம். ஒன்றிய அரசு தனது போக்கை மாற்றிக் கொள்ளாவிட்டால், வங்கி ஊழியர்களுடன் இணைந்து அனைத்துத் துறை தொழிலாளர்களும் போராட்டக் களமிறங்குவார்கள் என்பதை அறிவிக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது