tamilnadu

img

விரும்பும் உன்னை தேயம்! - கோவி.பால.முருகு

கதிரவன் கதிர்கள் கையால்
கடலை அள்ளிக் குடிக்கும்!
கருமேகம்  வடிக்கும்!-அவை
புதிரான உருவம் கொண்டு 
புரண்டு  புரண்டு  ஓடும்!
புயலும்  மழையும்   ஆடும்!

மலையுச்சி  மேகக்   கூட்டம்
மகிழ்ந்து சென்று குளிரும்! 
மழைதந்து   அருளும்!-அவை
நிலமடைந்து ஆறு கால்வாய்
நிறைந்து  வயல்கள்  சேரும்!!
நிலங்கள் செழிப்பாய்   மாறும்! 

உப்புநீரை  உயர்ந்த நீராய்
உலகிற் கீந்து  மகிழும்!
உணவு  தந்து  நெகிழும்!-மீண்டும்
உப்புக்  கடலை அடைந்து
உயர்த்தும் கடலின் வளத்தை! 
உலகிற் கீனும் நலத்தை!  
                 

மழையைப் போல கருணை
மனதில் கொள்ள வேண்டும்!
மாற்றம் உன்னில் தோன்றும்!-அதில்
விழையும் மனித நேயத்தாலே
விரும்பும் உன்னைத் தேயம்!
விரைந்து புகழ்மிகப்  பாயும்!