கதிரவன் கதிர்கள் கையால்
கடலை அள்ளிக் குடிக்கும்!
கருமேகம் வடிக்கும்!-அவை
புதிரான உருவம் கொண்டு
புரண்டு புரண்டு ஓடும்!
புயலும் மழையும் ஆடும்!
மலையுச்சி மேகக் கூட்டம்
மகிழ்ந்து சென்று குளிரும்!
மழைதந்து அருளும்!-அவை
நிலமடைந்து ஆறு கால்வாய்
நிறைந்து வயல்கள் சேரும்!!
நிலங்கள் செழிப்பாய் மாறும்!
உப்புநீரை உயர்ந்த நீராய்
உலகிற் கீந்து மகிழும்!
உணவு தந்து நெகிழும்!-மீண்டும்
உப்புக் கடலை அடைந்து
உயர்த்தும் கடலின் வளத்தை!
உலகிற் கீனும் நலத்தை!
மழையைப் போல கருணை
மனதில் கொள்ள வேண்டும்!
மாற்றம் உன்னில் தோன்றும்!-அதில்
விழையும் மனித நேயத்தாலே
விரும்பும் உன்னைத் தேயம்!
விரைந்து புகழ்மிகப் பாயும்!