வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம்
தஞ்சாவூர், ஜுன் 28- தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்கும்போது, மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள மகளிர் கீழ்க்காணும் சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிடச் சான்று), வயது வரம்பு - 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று வழங்க வேண்டும். திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று (வட்டாட்சியரிடம் பெறுதல் வேண்டும்) சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமானம் வரம்பு ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும் (வருமானச் சான்று வட்டாட்சியரிடமிருந்து பெறுதல் வேண்டும்). எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்களை 23.06.2025 முதல் 14.07.2025-ஆம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்தில், அறை எண்.303, 3 ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்படுவர். இதர விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நலிந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
புதுக்கோட்டை, ஜுன் 28- விளையாட்டுத்துறையில் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.6,000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேசிய போட்டிகளில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும் (அல்லது) சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல் வேண்டும். ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், அகில இந்திய பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் மற்றும் ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சகம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் தகுதியாகக் கொள்ளப்படும். 2025 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவராகவும் இருத்தல் வேண்டும். மாத வருமானம் ரூ.6,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதி இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையத்தில் https://sdat.tn.gov.in விண்ணப்ப படிவம் கிடைக்கும் மற்றும் விண்ணப்பித்தினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்திட வேண்டும். இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்: விளையாட்டு சாதனைகளுக்கான சான்றிதழ்கள் வயது மற்றும் அடையாள சான்றிதழ் (ஆதார்) பிறப்பிட சான்றிதழ், வருமான சான்று ஓய்வு பெற்றதற்கான விவரங்கள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம் 31.07.2025 மாலை 5 மணி வரை. மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை: தந்தைக்கு சாகும் வரை சிறை
தஞ்சாவூர், ஜுன் 28- மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு, தஞ்சாவூர் நீதிமன்றம் சாகும் வரை சிறை தண்டனையை வெள்ளிக்கிழமை விதித்தது. கும்பகோணம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது 47 வயதுள்ள தந்தை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து தந்தையை 2020 ஆம் ஆண்டில் கைது செய்தனர். இதுதொடர்பாக, தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜெ.தமிழரசி விசாரித்து தந்தைக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூர், ஜுன் 28- அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான டி. மலர்வாலண்டினா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவில், தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்-1, துணை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர்-3, உதவி சட்ட ஆலோசகர்-6, உதவியாளர்-3, வரவேற்பாளர்-1, அலுவலக உதவியாளர்-3 என மொத்தம் 17 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலிப்பணியிடங்கள் குறித்த அனைத்து விபரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை ://http://hazhnhhabnzh.ksrrnzhtl.njrs.ny/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.7.2025 தேதி மாலை 5.30 மணிக்குள் “தலைவர்/முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, அரியலூர் 621704“ என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக மட்டும் அனுப்பி வைக்க வேண்டும்.
பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
அரியலூர், ஜுன் 28- அரியலூர் மாவட்டத்தில் பன்முகத் தன்மை புரிந்தவர்கள், பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பொ.ரத்தனசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டிற்கு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல் (ம) பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவைகள் மற்றும் வர்த்தகம் (ம) தொழில் துறைகளில் அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.1.2026 ஆம் நாளன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் பத்ம விருதுகள்(பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ) வழங்கப்படவுள்ளது. இவ்விருதிற்கு பன்முக திறமை புரிந்தவர்கள் 30.6.2025-க்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ந.லெனின் - 7401703499 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.