ஏக்கம் - வரத.இராஜமாணிக்கம்
சந்து எட்டு அடி அகலத்தில் சிறியதாக இருந்தது. அதற்குள் ஆம்புலன்ஸ் வண்டி வர சிரமப்பட்டது. ராமாத்தாள் வீட்டு வாசல் நீட்டிக் கொண்டிருந்ததால் வண்டி அங்கேயே நின்று விட்டது.
அப்பொழுது காலை 7 மணி இருக்கும். வாசல் தெளித்து கோலம் போட்ட பெண்கள் காலைச் சமைய லில் ஈடுபட்டிருந்தனர். வீடு தவறாமல் மிக்சி விட்டு விட்டு கர்ரென சத்தமிட்டுக் கொண்டிருந்தது. ஆண்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவும், வேலைக்கு கிளம்பவுமான அவசரத்தில் இருந்தனர். ஒருவ ருக்கும் ஆம்புலன்ஸ் சந்துக்குள் வந்தது தெரிய வில்லை. எத்தனை தடவை அடித்து விரட்டினாலும் அங்கேயே சுற்றிவரும் கருப்பும், வெள்ளையும் கலந்த தெரு நாய், ஆம்புலன்சின் வருகையால் அதிர்ச்சி யுற்று, கவனமாக ஓரம் ஒதுங்கியது. பிறகு சுதாரித்துக் கொண்டது. உயிர் போவதைப் போல சத்தமாக குரைக்க ஆரம்பித்தது. அப்பொழுதும் யாரும் வெளி யில் வந்து பார்க்கவில்லை. ஒரு சந்து மாறி இன்னொரு சந்துக்குள் இருந்து, நான்கு இளவட்டங்களும், ஒரு நரைத்த தலைக்கார ரும் வேகுவேகென்று வந்தனர். “ஏன் இதுக்கு மேல வண்டி வராதா” என நீலச்சட்டை போட்டிருந்த இளை ஞன் கேட்டான். அதற்கு ஆம்புலன்ஸ் ஓட்டுனர், ராமாத்தாள் வீட்டு வாசலைக் காட்டி விட்டு பீடியை பற்ற வைத்தார். ஆம்புலன்சின் கதவுகள் ஆவென திறந்ததும். உள்ளே ஃபிரீசர் பாக்ஸ் படுத்திருந்தது. நான்கு இளை ஞர்களும் ஏறி இறக்கினர். பாக்சுக்கு கீழே உருட்டிச் செல்வதற்கு ட்ராலி இருந்தது. ஆனாலும் அவர்கள் தூக்கிச் செல்லவே விருப்பப்பட்டனர். சந்தின் வளை வில் புள்ளையார் கோவில் இருந்தது. அதைத் தாண்டும்போது பாக்சின் கனம் தாங்காமல் இவர்களுக்கு மூச்சிரைத்தது. “உள்ள பாடியா இருக்கு, வெறும் பெட்டிதான இறக்கி உருட்டுங்கடா” என நரைத்த தலைக்காரர் கூறி னார். கீழே இறக்கினாலும், உடைந்து போன சிமெண்ட் சாலை உருட்ட இடம் தரவில்லை. சந்தின் குறுக்கே ஒரு அடி அகலத்திற்கு தோண்டி உள்ளே பைப் இறக்கிய நகராட்சி கல்லையும், மண்ணையும் கலந்து மூடி விட்டுப் போய் ஐந்தாறு வருடங்கள் இருக்கும். கைவீசி நடக்க முடியாத அளவுக்கு சந்தில் இருந்த வர்களை நகராட்சி கட்டுதிட்டமாக வைத்திருந்தது. பாக்சை வரவரவென்று இழுத்ததில் அது கட முடாவென்று சத்தம் எழுப்பியது. ஆம்புலன்ஸ்காரன் ஓடி வந்து “தூக்கிட்டுப் போங்க..” என்று பதறி னான். நாய் ஏதோ ஆபத்து வந்துவிட்டதை போல சற்றுத்தள்ளி நின்று ஊளையிட்டது. இவ்வளவு களேபரத்திற்குப் பிறகு, காளியம்மாள் வீட்டுக் கதவு மட்டும் திறந்தது. காளியம்மாள் மூலமாக அந்தச் செய்தி ஒவ்வொரு வீடாகப் போனது. அவருக்கு எழுபது வயது இருக்கும். ஏறு நெற்றியுடனும் நீட்டமாக ஆடும் முன் பற்களுடனும் அவர் பேசிக்கொண்டிருந்தார். “அம்புஜம் நேத்து ராத்திரி செத்துட்டாளாம்”. கேட்டவர்களெல்லாம் “அய்யய்யோ..” என்றனர். கோயில்ல கொடுத்த சக்கரப்பொங்கல சாப்டுட்டு படுத்தவ, ராத்திரி ரெண்டு மணிக்கு எந்திரிச்சி வாந்தி எடுத்துருக்கா. அப்பிடியே நெஞ்சப் புடிச்சிட்டு போய்ச் சேந்துட்டா” நேரில் பார்த்தது போல பேசும் காளியம்மாளின் வாயைப் பார்த்தது தெரு ஜனம். ரொம்ப நாளாக ஆடும் அந்தப் பற்கள் எப்படி இது வரை விழாமல் இருக்கிறது” என இட்லிக் கடை சரசு அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அம்புஜம் தெருவுக்குள் வட்டிக்கு கொஞ்சம் பணம் கொடுத்து இருந்தாள். கைபிடிச் சீட்டு நடத்தி னாள். பூ கட்டி விற்றாள். இது தவிர ஜாக்கெட் தைக்கும் வேலையும் செய்தாள். எல்லாவற்றிலும் வருமானம் வந்தது. ஆனால் அவளது குடும்பத்திற்கு அது போதவில்லை. பறந்து கட்டி திரிந்து கொண்டி ருந்தவள் இறந்து போனாள் என்பதை யாராலும் நம்ப முடியவில்லை. வீட்டுக்கு முன் பாக்சை கீழே வைத்தவர்கள், வீட்டின் குறுகிய வாசலைப் பார்த்தார்கள். இதற்குள் எப்படி இதை உள்ளே கொண்டு போவது என யோசித்தனர். அப்போதும் அந்த நரைத்த தலைக்காரர் தான், “பொட்டி உள்ள போவாது, பாடியை வாச லுக்கு கொண்டாந்துறலாம்” என்றார். அது தான் சரி, சாயந்தரம் ஐந்து மணி வரை பாடி தாங்க வேண்டுமே.. என்ற கவலையுடன் அம்புஜத்தை வீட்டுக்குள்ளே இருந்து வாசலுக்கு கொண்டு வந்து விட்டனர். பாக்ஸிக்குள் அம்புஜம் போனதும் மெழுகு பொம்மை யைப் போல அழகாக தெரிந்தாள். சாமியானா பந்தலின் நிழலுக்கு மத்தியில் இருந்த பாக்ஸுக்கு கரண்ட் இணைப்பு கொடுத்ததும் உயிர் வந்தது. அம்புஜத்தின் கணவர் சண்முகம் இறந்து இருபது வருடங்களாகிறது. அவளுக்கு பதினைந்து வயது இருக்கும்போது மதுரையிலிருந்து கட்டிக் கொண்டு வந்தார்கள். கறுப்பாகவும், கட்டையாகவும் இருந்த சண்முகத்திற்கு இவ்வளவு அழகான மனைவியா என தெருவே ஆச்சர்யப்பட்டது. சிறு குத்து விளக்கு நடந்து செல்வதைப் போல ஒளியுடன் இருந்த அம்பு ஜத்திற்கு அடுத்தடுத்து மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தன. அவளுக்கு முப்பத்திரண்டு வயது இருக்கும் பொழுது சண்முகம் ஒரு விபத்தில் போய்விட்டான். பூவும் பொட்டும் கை நிறைய வளையலும் அணிவித்து, கல்யாணச் சேலையுடன் அவளுக்கு கைம்பெண் சடங்கு செய்தபோது, அவள் அப்பொ ழுது தான் திருமணத்திற்கு தயாரான பெண் போல பூரித்திருந்தாள். அவளது அம்மா தலையிலடித்துக் கொண்டு கதறினாள். அதை அமைதியாக வேடிக்கை பார்த்தவாறு அம்புஜம் இருந்தாள். அப்போது கதவு இடுக்கு சந்து வழியாக இளம் வயதாக இருந்த நரைத்த தலை முடிக்காரர் கறுப்பு முடியுடன் அம்பு ஜத்தின் அழகை கண்கள் விரிய ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். எல்லாம் முடிந்து அம்புஜத்தை எடுக்க இருந்த னர். தெரு முச்சூடும் கூடியிருந்தது. சேகண்டிக்காரன் சங்கை எடுத்து வளமாக ஊதி இறுதி அறிவிப்பு கொடுத்தான். சேகண்டியிலிருந்து வந்த நங்..நங்..என்ற சத்தத்துடன் சங்கொலியும் சேர்ந்ததில், இழவு வீட்டின் இரைச்சலும், அழுகைச் சத்தமும் ஒடுங்கி ஒருவித அமைதியை ஏற்படுத்தி இருந்தது. மயானத்திற்கு கொண்டு செல்லும் அமரர் ஊர்தி, ராமாத்தாள் வீட்டு வாசலுடன் ஆம்புலன்சைப் போலவே நின்று கொண்டது. ஒருமுறை “வாசல, கொஞ்சம் குறுக்குனா என்னக்கா, எல்லா எழவும் உன் வீட்டு வாசல்ல தான் நடக்குது” என சொன்ன பெண் கவுன்சிலரிடம் ராமாத்தாள் வரிந்து கட்டிக் கொண்டு போனது, அந்த கறுப்பு வெள்ளை நாய்க்குத்தான் தெரியும். அம்புஜத்தை ஸ்ட்ரெச்சருடன் சேர்த்து சுமக்க அதே நான்கு இளைஞர்களை, நரைத்த முடிக்காரர் அழைத்தார். ராமாத்தாள் வீட்டு வாசலில் வைத்து, அம்புஜம் அமரர் ஊர்தியில் ஏறி மாலை மரியாதைகளு டன் படுத்துக்கொண்டாள். நரைத்த தலை முடிக்காரரும் ஒரு டெய்லர்தான். அவருக்கு மனைவியோ, பிள்ளை குட்டிகளோ இல்லை. அம்புஜம் வீட்டுக்கு நேர் எதிர்புறம் கடை வைத்திருந்தார். அவருக்கு வரும் ஜாக்கெட் தைக்கும் வேலையை அம்புஜத்திடம் கொடுப்பார். அம்புஜம் அவளது வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது களை அவரது கடை வாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பாள். யாரும் விகல்பமாக பார்த்தது இல்லை. அம்புஜத்தை கரையோரம் புதைக்கும் பொழுது இறங்கு வெயில் ஆற்று நீரில் விளையாடிக் கொண்டிருந்தது. ஆற்றில் குளித்துவிட்டு கரை யேறிய அம்புஜத்தின் மூன்றாவது மகன் கண்க ளுக்கு, நரைத்த தலைமுடிக்காரர் செத்துப்போன அப்பனைப் போல தெரிந்தார். அதுவரை அவனுக்குள் அடங்கி இருந்த துக்கம் உடைத்துக்கொண்டு வந்தது. “மாமா..” என்றழுத வாறு நரைத்த தலைமுடிக்காரரை ஆறத்தழுவிக் கொண்டான். அவனது தழுவலில் அம்புஜத்தை பூரண மாக உணர்ந்த நரைத்த தலைமுடிக்காரர் அவனை ஆதரவாக அணைத்தவாறே பெரும் கேவல் மூலம் அவரது ஆழ்மனது ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.