பட்டுக்கோட்டைக்கு ஒரு கவி வரலாறு!
மகாகவி பாரதியின் வாழ்க்கையை கவியரசு வைரமுத்து கவிதையிலே வார்த்தார் அது ‘கவிராஜன் கதை’. மாவீரன் பகத்சிங்கின் வரலாறை கவிஞர் கவிவர்மன் கவிதையாலேயே வரைந்தார். அது ‘ஒரு தூக்குக் கயிற்றின் மரணம்’. கவியரசர் கண்ணதாசனின் சரிதத்தை கவிஞர் தங்க.செந்தில்குமார் கவிதையில் படைத்தார் அது ‘சிறுகூடல்பட்டி சிகரம்’. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் புகழ்வாழ்வை கவிஞர் ஜீவி கவிதையில் வடித்துள்ளார். அது, ‘பாட்டுத் திலகம்.’ அதில் ஒரு துளி தெளிப்பு.... ஐவரி
ஐவரி!
டில்லியின் அடையாளம் செங்கோட்டை. சென்னையின் அடையாளம் செயின்ட் ஜார்ஜ் கோட்டை. மனதில் தைக்கும் கவிதைகளுக்கு அடையாளம் பட்டுக்கோட்டை. 55 படங்கள். 250 பாடல்கள். இன்னும் சில கவிதைகள். படைப்பு பட்டியல் கொஞ்சம் தான். சின்ன குண்டூசி தாள்களை இணைப்பது போல பட்டுக்கோட்டையின் பாட்டு கேட்டு நெகிழ்ந்த நெஞ்சம் கொஞ்சம் அல்ல. சின்னப் பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்ற வாலிப வரிகள் தன் உள்ளங்கைகளுக்குள் தத்துவமுத்தை ஒளித்து வைத்திருக்கிறது. ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே. அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே. வாழ்வின் சாரத்தை வரைந்து காட்டிய சொற்சித்திரமிது. வசதி இருக்கிறவன் தர மாட்டான். வயிறு பசிக்கிறவன் விடமாட்டான். மூலதனம் கூலி ஜனம் வாழ்க்கை பாடு மாற அவன் சொன்ன வாய்ப்பாடு. கஞ்சி கஞ்சி என்றால் பானை நிரம்பாது சிந்திச்சி முன்னேற வேண்டுமடி. வந்தனை கலாச்சாரம் மூளையை மழுங்கடிக்கும். சிந்தனை கலாச்சாரம் மூளையின் மடிப்பை அதிகரிக்கும் தெளிந்து சொன்னவனின் தேர்ந்த வரிகள் இவை. அவன் சொன்னதில் பொய் வரிகள் ஏதுமில்லை. எல்லா வரிகளுமே ஐவரிதான்.