பூமி பாலைவனமானால்...!?
இந்திய நிலப்பரப்பைப் போல ஈரப்பதத்துடன் இருந்த மூன்று மடங்கு பூமி வறண்ட நிலமாக மாறிவிட்டது. கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதிகளில் வேளாண்மை செய்வது கடினமாக உள்ளது. இப்போது அண்டார்டிகா தவிர பூமியின் மொத்த நிலப்பரப்பில் 40% வறண்ட பகுதிகளே. கடந்த முப்பதாண்டுகளில் உலகில் மும்மடங்கு நிலம் வறண்டு போய்விட்டது. பூமியின் வறண்ட நிலை நிரந்தரமானது என்று இது குறித்து ஆய்வு செய்த ஐ நா இடைநிலை அறிவியல் கோட்பாடு (UN Science Policy Interface UN SPI)) அமைப்பு கூறுகிறது. 1990 முதல் 2015 வரை உள்ள காலத்தில் பூமி வறண்டு போனதால் ஆப்பிரிக்கா தன் உள் நாட்டு வளர்ச்சியில் (GDP) 12 சதவிகிதத்தை இழந்துள்ளது. வரும் ஆண்டுகளில் இதை விட மோசமான நிலையை ஆப்பிரிக்கா சந்திக்கவேண்டி இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. வரும் ஐந்தாண்டுகளில் இந்த இழப்புகள் ஆப்பிரிக்காவில் 16%, ஆசியாவில் 7% என்ற அளவில் இருக்கும். ”பொதுவாக ஏற்படும் வறட்சியைப் போல இல்லாமல் தற்காலிகமான குறைந்த மழைப்பொழிவு, பாலைவனமாதல் போன்றவை மாற்றம் அடையாத காய்ந்துபோன வறண்ட நிலத்தை நிரந்தரமாக உருவாக்குகிறது. ஒரு நிலப்பரப்பின் காலநிலை உலந்து காணப்படும்போது அப்பகுதி மீண்டும் முந்தைய நிலைக்கு மீண்டு வரும் தன் திறனை அது இழந்துவிடுகிறது. உலகில் பெரும்பகுதி நிலங்களும் இப்போது இந்நிலையில் உள்ளது. இந்த மாற்றம் பூமியில் உயிரினங்களின் வாழ்வை மறு வரையறை செய்கிறது” என்று பாலைவனப் பரவலுக்கு எதிரான ஐநா அமைப்பின் (UN convention to combat desertification (UNCCD) செயல்நிலை செயலர் இப்ரஹிம் தையோ (Ibrahim Thiaw) கூறுகிறார். குறிப்பிட்ட சில பயிர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்நிலை தொடர்ந்தால் கென்யாவில் 2050ல் சோளத்தின் விளைச்சல் இப்போதுள்ளதில் பாதியாகக் குறைந்துவிடும். முன்பு செழுமையாக இருந்த நிலங்கள் மழைப்பொழிவின் 90% நீர் ஆவியாவதன் காரணமாக பாலைவனங்களாக மாறுகின்றன. இதனால் வெறும் 10% நிலம் மட்டுமே வேளாண்மைக்கு தகுதியானதாக உள்ளது. இந்த நூற்றாண்டின் பாதிக்குள் பூமியின் மூன்றின் இரண்டு பங்கு நிலங்கள் குறைந்த நீரையே சேமிக்கும் நிலைக்கு தள்ளப்படும். 2024ல் சௌதி அரேபியா ரியாத் நகரில் பாலைவனப் பரவலுக்கு எதிரான உலக மாநாடு ஐநா சார்பில் நடந்தது. நாட்டின் பாலைவனப் பகுதிகளை பசுமையாக்கும் செயலில் அந்நாடு ஈடுபட்டுள்ளது. ஆனால் புவி வெப்ப உயர்வு, காலநிலை மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருக்கும் பசுமைக் குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதில் அந்நாடு முட்டுக்கட்டையாக உள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர். உயிர் வாழ்வின் ஆதாரம் ஐநா அறிவியல் கோட்பாட்டு அமைப்பின் 2020ஆய்வின்படி உலக மக்கட்தொகையின் 30% அதாவது 2.3 பில்லியன் பேர் வறண்ட நிலப்பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இப்பகுதிகளில் 1990ல் உலக மக்களில் 2.5% பேர் மட்டுமே வாழ்ந்தனர். கார்பன் உமிழ்வை குறைக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் 2100ல் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆப்பிரிக்க மக்களில் பாதி பேர் இப்போதே வறண்ட பகுதிகளில்தான் வாழ்கின்றனர். “உலகின் பெரும்பகுதிகளையும் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாடு நிரந்தரமான வறண்டதாக மாற்றுகிறது. இதனால் நீர்ப் பற்றாக்குறை அதிகமாகும். இது மக்களையும் இயற்கையையும் பேரழிவுக்கு இட்டுச்செல்லும்” என்று பாலைவனப் பரவலுக்கு எதிரான ஐநா அமைப்பின் தலைமை விஞ்ஞானி பாரன் ஓர் (Barron Orr) கூறுகிறார். காலநிலை மாற்றம் நீர்ப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. மோசமான விவசாய முறைகள், மிதமிஞ்சிய நீர்ப் பயன்பாடு, மண் அரிப்பு, இயற்கையான நிலப்பகுதிகளின் அழிவு போன்றவை இதில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. “ஆரோக்கியமான மண்ணே பூமியில் உயிர்த்துடிப்பின் ஆதாரம். வறண்ட நிலங்கள் மண்ணின் அழிவையே எடுத்துக்காட்டுகிறது. மனிதக் குறுக்கீடுகளே இதற்கு காரணம். மிதமிஞ்சிய வேளாண்மை உயிர்ப் பன்முகத்தன்மையை சிதைக்கிறது. மண்ணின் செழுமையை அழிக்கிறது. கார்பன் சேமிப்பின் அளவு குறைகிறது. பெரும் வெள்ளப்பெருக்குகள், காட்டுத் தீ சம்பவங்கள், வறட்சியை அதிகரிக்கிறது” என்று பாதுகாப்பான மண் (Save Soil campaign group) என்ற இயக்கத்தின் தலைமை தொழில்நுட்ப அலுவலர் ப்ரவீனா ஸ்ரீதர் (Praveena Sridhar) கூறுகிறார். “நாம் பூமியில் வாழ இந்த மண் மட்டுமே உள்ளது. இந்நிலத்தில்தான் நாம் உணவை உற்பத்தி செய்யவேண்டும். பசுமைக் குடில் வாயு உமிழ்வை குறைத்தல், பூமி வறண்டுபோவதை தடுத்தல் போன்றவை மூலம் இதற்கு தீர்வு காணமுடியும். நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் விவசாயம், வன மீட்பு போன்றவற்றின் மூலம் நமக்கு வாழ்வு தரும் இந்த பூமி பாலைவனமாவதை தடுக்கலாம்” என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி புவியியல் துறை பேராசிரியர் மார்க் மாஸ்லின் (Mark Maslin) கூறுகிறார். “அதிகரிக்கும் வறட்சி வறுமையை ஆழமாக்குகிறது. இந்நிலை வளங்களின் பற்றாக்குறை, வேளாண்மை முக்கியத்துவத்தின் இழப்பு, மனிதர்களின் ஆரோக்கியம், சத்துணவில் தட்டுப்பாடு, உணவுப் பற்றாக்குறை, மக்களின் இடம்பெயர்வை ஏற்படுத்துகிறது” என்று லண்டன் பொருளாதாரப் பள்ளியின் க்ராந்தம் (Grantham) கழகத்தின் ஆய்வாளர் கேட் கேனன் (Kate Gannon) கூறுகிறார். இது பூமிக்கு இழைக்கப்படும் அநீதி. இதைத் தடுக்க உடனடியாக செயலில் இறங்கவேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.