உருகும் பனிப்பாறைக்கு இறுதிச் சடங்கு
உருகும் பனிப்பாறைக்கு நேபாளம் மே 2025ல் இறுதிச் சடங்கு நடத்தியது. ஐரோப்பிய கோபர்நிகஸ் காலநிலை சேவை அமைப்பின் தரவுகள்படி ஏப்ரல் 2025ல் உலகளாவிய வெப்பநிலை சாதனையளவாக இருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள பலர் வடக்கு நேபாளத்தில் லாங்டாங் (Langtang) பள்ளத்தாக்கில் கடல் மட்டத்தில் இருந்து 5,170 முதல் 5,750 மீட்டர் வரை உயரத்தில் அமைந்துள்ள யாலா (Yala) பனிப்பாறை பகுதிக்கு வருகை தந்தனர்.
பிராத்தனைக் கொடிகளும் நினைவுப் பலகைகளும்
1974 முதல் இந்தப் பனிப் பாறை 66% உருகிவிட்டது என்று பன்னாட்டு ஒருங்கிணைந்த மலைப்பகுதி வளர்ச்சி மையம் (International Centre for Integrated Mountain Development (ICIMOD) ) கூறுகிறது. இந்த நிலை நீடித்தால் 2040ல் இது முற்றிலும் உருகிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இது நிகழ்ந்தால் உலகளவில் அதிகரிக்கும் மரணமடைந்ததாக அறிவிக்கப்படும் பனிப்பாறைகளின் பட்டியலில் இது நேபாளத்தில் இருந்து இடம்பெறும் முதல் பனிப்பாறையாக இருக்கும். “கடந்த 40 ஆண்டுகளாக இந்த பனிப்பாறையை ஆராய்ந்துவரும் நான் இது பாதியாக உருகியதையும் என் கண்களால் பார்த்திருக்கிறேன். அடுத்த தலைமுறை காண்பதற்கு இந்த பனிப்பாறை உயிருடன் இருக்காது. இது கவலையளிக்கிறது” என்று பன்னாட்டு மலைப் பகுதி வளர்ச்சி மையத்தைச் சேர்ந்த பனிப்பாறை நிபுணர் (Cryosphere expert) ஷரத் பிரசாத் ஜோஷி (Sharad Prasad Joshi) கூறுகிறார். இமய மலை பின்னணியில் யாலாவில் புத்த துறவிகள் சடங்குகளை நடதினர். அப்போது பிரார்த்தனைக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. நேபாளம், ஆங்கிலம், திபெத்திய மொழிகளில் அஞ்சலி குறிப்புகள் எழுதப்பட்ட இரண்டு நினைவுப் பலகைகள் நாட்டப்பட்டன. “இங்கு இது எங்களுக்கு தெரிந்தே நடக்கிறது. என்ன செய்யவேண்டும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம். இதை எங்களால்தான் நடந்தது என்று உங்களுக்கு சொல்லவே இந்த நினைவுச் சின்னங்கள்” என்று ஒரு நினைவுப் பலகையில் எழுதப்பட்டுள்ள பகுதி செய்தி கூறுகிறது. இந்த வார்த்தைகள் ஐஸ்லாந்து எழுத்தாளர் ஆண்ட்ரி ஸ்நேர் மாக்னசன் (Andri Snaer Magnason) அவர்களால் எழுதப்பட்டது. இவர் எழுதிய செய்தி உருகிய பனிப்பாறைக்கு உலகில் முதல் இறுதிச் சடங்கு நடந்த ஐஸ்லாந்தில் உள்ளது. ஏற்கனவே கரைந்துபோன பனிப்பாறைகளுக்கு மெக்சிகோ, யு எஸ் மற்றும் சுவிட்சர்லாந்தில் இது போன்ற நினைவுச் சடங்குகள் நடந்துள்ளன. இது வரை பதிவு செய்யப்பட்ட தரவுகளில் ஏப்ரல் 2025ல் பதிவாகிய வெப்பநிலையே இரண்டாவது மிக உயர்ந்த வெப்பநிலை என்று கோபர்நிகஸ் காலநிலை சேவை அமைப்பு கூறுகிறது.
திறந்த புத்தகம்
இத்தரவுகள் செயற்கைக்கோள்கள், கப்பல்கள், விமானங்கள், வானிலை ஆய்வு நிலையங்களில் இருந்து பெறப்பட்ட மில்லியன் கணக்கான விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. ஏப்ரல் 2025ம் ஆண்டிற்கு முன்பு கடந்த 22 மாதங்களில் இது வரை ஒரே ஒரு முறை மட்டுமே தொழிற்புரட்சிக்கு முன்பிருந்த வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக இருந்தது. 2015 பாரிஸ் உடன்படிக்கையின்படி இந்த வெப்ப உயர்வு காலநிலை சீரழிவை எடுத்துக்காட்டுகிறது. இமயமலையில் 3,500 கிலோமீட்டர் நீளம் உள்ள இந்துகுஷ் தொடரில் அமைந்துள்ள ஏழு பனிப்பாறைகளில் யாலாவும் ஒன்று. இந்த பனிப்பாறை பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டு முழுவதும் கண்காணிக்கப்படுகிறது என்று பன்னாட்டு மலைப் பகுதி வளர்ச்சி மையம் கூறுகிறது. “இந்த பனிப்பாறை இளம் விஞ்ஞானிகளுக்கும், பனிப்பாறை ஆய்வாளர்களுக்கும் ஒரு திறந்த புத்தகமாக இருந்ததால் இதை கௌரவிக்கும் வகையில் இதற்கு இந்த நினைவுச் சடங்கு நடத்தப்பட்டது” என்று ஜோஷி கூறுகிறார். முன்பை விட இப்போது வேகமாக காலநிலை மாற்றத்தால் உருகிக் கொண்டிருக்கும் இமய மலை பனிப்பாறைகள் இரண்டு பில்லியன் மக்களுக்கு நீர் வழங்குகிறது. ஆனால் பனிப்பாறைகளின் அழிவு கணிக்கமுடியாத அதிக செலவு பிடிக்கும் பேரிடர்களை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இப்போதுள்ள உருகுதல் அளவு நீடித்தால் உலகின் பெரும்பாலான பனிப்பாறைகளும் 21ம் நூற்றாண்டை சந்திக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலக மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் உறை பனிப்பாறைகள்
உலகில் உள்ள 19 பனிப் பிரதேசங்களும் உருகியதால் 2024ம் ஆண்டும் பனிப் பரப்பு இழக்கப்பட்ட தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக இருந்தது என்று ஐ நா கூறியுள்ளது. இதனால் இப்பிரதேசங்களில் இருந்த மொத்த பனிப் பரப்பில் 450 பில்லியன் டன் கன அளவு பனிக்கட்டிகள் இழக்கப்பட்டது என்று சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்டு செயல்படும் உலக பனிப்பாறை கண்காணிப்பு சேவை அமைப்பு கூறுகிறது. “மிகக் குறைவான உமிழ்வு இருந்தாலும் நேபாளம் வெப்ப உயர்வின் முன்வாசலில் நிற்கிறது. யாலா உருகிக் கொண்டிருக்கிறது. உலக மக்களின் தலையெழுத்தும் வருங்காலமும் உறைந்திருக்கும் இந்தப் பனிப்பாறைகளிலேயே உள்ளது என்பதால் மலைப் பகுதி பனிப்பாறைகளின் நிலை பற்றி அக்கறை செலுத்தவேண்டும் என்று உலகத் தலைவர்களை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்” என்று நேபாள அரசின் காலநிலை மேலாண்மைப் பிரிவின் தலைவர் மகேஷ்வர் தாக்கல் (Maheshwar Dhakal) கூறுகிறார். மனிதனின் காலக் கணிப்புகளில் இந்த பனிப்பாறைகளின் இழப்பு மீட்கமுடியாதது. தீர்வுக்காக செயல்படவேண்டிய தருணம் இதுவே!