tamilnadu

img

கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் வேலைநிறுத்தம்

சென்னை, ஜூலை 8 - தொழிலாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்றாவிடில் வேலை நிறுத்தத்தை தவிர்க்க முடியாது என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழி யர் சம்மேளன (சிஐடியு) பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார் தெரிவித்துள்ளார். சம்மேளனத்தின் 15வது மாநில மாநாடு தீர்மானங்களை விளக்கி வெள்ளியன்று (ஜூலை 8) அனைத்து போக்குவரத்து மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பும் வாயிற்கூட்டம் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு வாயிற்கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் கே.ஆறுமுகநயினார் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் வேலை நிறுத்தம் நடைபெற்றபோது, திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரச்சனைகள் தீர்க்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுக ஆட்சி பொறுப் பேற்று, ஓராண்டை கடந்த பிறகும்  ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்யா மல் காலதாமதம் செய்துவருகின்றனர். போக்குவரத்து துறை அமைச்சர் மே 12ந் தேதி சங்கங்களுடன்  பேச்சு வார்த்தை நடத்தினார். 3 வாரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் படும் என்றார். அதன்படி நடக்காத தால் வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுக்க உள்ளதாக அறிவித்தவுடன் ஜூலை 11அன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பே மேட்ரிக்ஸ்

பே மேட்ரிக்ஸ் முறையில் ஊதிய ஒப்பந்தம் ஏற்படவும், ஓய்வூதியர் களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்கேற்ற வகையில் பேச்சு வார்த்தை நடைபெற வேண்டும். போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை அரசு வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம். போக்கு வரத்துக் கழகங்களை மேம்படுத்த ஒரு  குழு அமைத்து பல்வேறு பரிந்துரை களை கடந்த அதிமுக ஆட்சியிடம் திமுக வழங்கியது. அந்த குழுவும் மேற்கண்ட பரிந்துரையை அளித் திருந்தது. அதை கூட நிறைவேற்ற மறுக்கின்றனர்.

தனியார்மயம்

அதிமுக ஆட்சி காலத்தில் அரசு போக்குவரத்து வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை மொத்த ஒப்பந்த புள்ளி ( காஸ்ட் கான்ட்ராக்டர் சிஸ்டம்) அடிப்படையில் இயக்க சட்டத்திருத்தம் செய்தது. அப்போது திமுக-வும் எதிர்த்தது. ஆனால் இந்த சட்டத்திருத்தத்தின்படியே தற்போது தனியார் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  கழகங்களில் ஆள் பற்றாக்குறை உள்ளது. ஓய்வு பெற்ற ஓட்டுநர்களை மீண்டும் பணியமர்த்த விரைவுப் போக் குவரத்துக் கழகம் முடிவெடுத்துள்ளது. இவற்றை சிஐடியு ஏற்கவில்லை. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வுக்கால பணப்பலன்களை வழங்காமல் வெறும் கையோடு அனுப்பு கின்றனர். 7 வருடமாக அகவிலைப் படியை உயர்த்தாமல் உள்ளனர். தொழி லாளர்களின் பிரச்சனையை தீர்க்கா விடில் அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களுக்கு  செல்ல  சிஐடியு  மாநாட்டில் முடிவெடுத்துள் ளோம்.

வேலைநிறுத்தம்

ஜூலை 2 அன்று நடைபெற்ற போக்குவரத்து அனைத்து சங்க கூட்டத்தில், நோட்டீஸ் கொடுத்து வேலை நிறுத்தத்திற்கு செல்வோம் என்று முன்மொழிந்தோம். இதனை தொடர்ந்து ஜூலை 11அன்று பேச்சு வார்த்தை நடத்த அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதில் பிரச்சனை தீராவிடில் வேலை நிறுத்தம் தவிர்க்க இயலாது. இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்திற்கு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொருளாளர் ஏ.ஆர்.பாலாஜி தலைமை தாங்கினார். சம்மேளன துணைத்தலைவர் எம்.சந்திரன், துணைப் பொதுச் செய லாளர்கள் சிவா, ரவிசங்கர், துணைத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர்.