மாநில அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டிகள் நிறைவு
தருமபுரி, ஆக.31- தருமபுரியில் நடை பெற்று வந்த மாநில அளவிலான மாதிரி நீதிமன்றப்போட்டிகள் சனியன்று நிறைவடைந் தன. அரசு சட்டக்கல்லூரி களுக்கிடையே மாநில அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டிகள் தருமபுரி அரசு சட்டக்கல்லூரியில் 3 நாட்கள் நடைபெற்றன. தொடர்ந்து, சனியன்று நடைபெற்ற இறுதிப்போட்டி மற்றும் நிறைவு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக, இப்போட்டிகளில் தமிழகமெங்கும் உள்ள அரசு சட்டக்கல்லூரிகளிலிருந்து மொத்தம் 143 கல்லூரிகளைச் சேர்ந்த அணியினர் பங்கேற்றனர். நான்கு சுற்றுகளாகப் போட்டிகள் நடைபெற்றன. இதில் சென்னை, புதுப்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மற்றும் திருச்சி அரசு சட்டக்கல்லூரி ஆகிய இரு அணிகள் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றன. இறுதிப்போட்டியில் சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி வெற்றிபெற்று முதல் பரிசை பெற்றது. இப்போட்டிகளுக்கு தருமபுரி மாவட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ராஜா, முதன்மை சார்பு நீதிமன்ற நீதிபதி ஞானபாலகிருஷ்ணன், கூடுதல் சார்பு நீதிபதி கலைவாணி, மூத்த வழக்குரைஞர் எஸ்.ஏ.அன்வர், அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் ரஞ்சித் ஓமன் ஆப்ரஹாம் ஆகியோர் நடுவா்களாக செயல்பட்டனர். இந்நிகழ்வில், உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் பேசுகையில், சட்டக்கல்லூரி என்பது சட்ட மையம் மட்டுமல்ல; சமூக அதிகாரத்தின் மேம்பாட்டுக்கான கோவில் போன்றது. சட்ட மாணவர்களுக்கு அனுபவமே சிறந்த ஆசான். சட்டத்துறையில் உள்ள இளையோர் தங்களுக்கான லட்சியத்தை முடிவு செய்து அதை நோக்கி பயணித்தால்தான் இலக்கை எளிதில் அடைய முடியும். கடின உழைப்புடன் புத்திக்கூா்மை, தொடா்புடையத் துறை நுண்ணறிவு உள்ளிட்டவையுடன் செயல்படும்போது சாதனைகள் நிச்சயம் வசப்படும், என்றார். இந்நிகழ்வில், அரசு சட்டக்கல்வி இயக்குநர் ஜெ.விஜயலட்சுமி, தருமபுரி மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள், தருமபுரி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் சி.உஷா, அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ஜி.ஜெயகௌரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.