சென்னை, பிப். 3 - ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட், மக்கள் தலையில், மேலும் மண்ணை வாரிப் போடுவதாகவும், முதலாளிகளுக்கு வளங்களை வாரி வழங்குவதாகவும் உள்ளதாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, சங்கத்தின் மாநிலத் தலைவர் எம். சின்னதுரை எம்.எல்.ஏ, பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, விவசாயத் தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைப் பற்றி கவனம் செலுத்தாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் பெரும் லாபத்தை இலக்காகக் கொண்டு முன் மொழியப்பட்டுள்ளது.
பாஜக அரசு கடந்த பத்தாண்டு காலமாக பின்பற்றி வரும் பொரு ளாதாரக் கொள்கைகளால் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங் களில் சிறு, குறு தொழில்கள் முடங்கி யும்- மூடப்பட்டும் உள்ளன. இதனால் வேலையின்மையின் நெருக்கடி மிகவும் தீவிரமடைந்துள்ளது. வேலையையும் வருமானத்தையும் இழந்துள்ள சாதாரண ஏழை - எளிய மக்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு அன்றாடம் துயரத்தை சந்திக்கின்றனர்.
கிராமப்புற மக்களுக்கு சிறிது ஆறுதலாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை- கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசு நிதி நிலை அறிக்கையில் போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் கேடு கெட்ட முறையில் சிதைத்து - சீர ழித்து வருகிறது.
நிதி ஒதுக்கீட்டையும் தினக்கூலி யையும் உயர்த்திட வேண்டும் என்ற நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரையை புறக்கணித்து, நடப்பு நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கீட்டை குறைத்துள்ள நட வடிக்கை கிராமப்புற ஏழை எளிய மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள ஒரு ஈனத்தனமான தாக்குதலாகும். பாஜக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாஜக-வின் ஆட்சியில், உலக பட்டினிக் குறியீட்டில் 105-ஆவது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ள நிலையில் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசு தற்போதைய நிதிநிலை அறிக்கையில் உணவு மானியத்தை கடந்த ஆண்டை விட 2250 கோடி குறைத்து சாமானிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ஆபத்தான செயலில் ஈடுபட்டுள்ளது. நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் விவசாயிகளின் நிலைமையை மேலும் கேள்விக்குறியாக்கி உள்ளது. உரமானியம் குறைக்கப் பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு, நாட்டின் விவசாயிகள் நாடு முழுவதும் நான்கு ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலை யில் அதுகுறித்த அறிவிப்பை பாஜக அரசு வெளியிடாதது, விவசாயி களை வஞ்சிக்கும் மோசமான நடவடிக்கையாகும்.
மக்கள் நலனில் பெரிதும் அக்கறை செலுத்தி ஆக்கப்பூர்வ மான திட்டங்களை செயல்படுத்தி வரும் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இரண்டு மாநில மக்களையும் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கும் நடவடிக்கை கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
எனவே, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை திரும்பப் பெற்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் மக்கள் நலத்திட்டங் களுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் நலனுக்கான நிதி ஒதுக்கீடு கோரிக்கையை ஒன்றிய பாஜக அரசு நிறைவேற்றிட வேண்டும்.
பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து பிப்ரவரி 5 அன்று நடைபெறும் விவசாயிகள் சங்கங்கள், தொழிற்சங்கங்களின் கூட்டு இயக்கத்தில், தமிழ்நாடு முழுவதும் விவசாயத் தொழிலாளர்களை முழு அளவில் திரட்டி பங்கேற்க வேண்டும் என அனைத்து மாவட்டக் குழுக்களையும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.