சென்னை, பிப்.9- அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2012 ஆம் வருடம் மார்ச் 29 இல் நடைபயிற்சி சென்ற, தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் திருச்சி - கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், கொலையாளிகள் யாரும் பிடிபடாத நிலையில், ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை உயர்நீதிமன்றம், விசாரணை அறிக்கையை 3 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
சிபிஐ விசாரணை நடத்தி வந்த நிலையில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என். ரவிசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில், சிபிஐ விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு மனு அளித்தார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே, அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி. பாரதிதாசன் முன்பு விசார ணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் சிபிஐ விசாரணை அதிகாரியோடு சேர்த்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையேற்ற நீதிபதி, சிபிசிஐடி, சிபிஐ என 10 ஆண்டு கள் விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கம் கண்டறியப்பட வில்லை அதனால் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்டார்.