மதுரை, மே. 25- மதுரை ரயில் நிலைய கிழக்கு நுழைவாயில் மற்றும் மேற்கு நுழைவாயில்களை இணைக்கும் வண்ணம் பயணிகள் காத்திருப்பு அரங்கு கட்டப்பட இருக்கிறது. இந்த அரங்குக்கு கீழே ரயில் பாதைகள் செல்லும் வகையில் அமையும். இந்த அரங்கில் ஓய்வு அறைகள், கழிப்பறைகள், உணவகங்கள் ஆகியவை அமைய இருக்கின்றன. இந்த அரங்கில் இருந்து நடை மேடைகளுக்கு செல்ல மின் தூக்கி, எஸ்கலேட்டர் போன்றவையும் அமைக்கப்படுகிறது. 22500 சதுர மீட்டரில் நான்கு மாடிகள் கொண்ட கிழக்கு நுழைவாயில் கட்டிடம் அமைய இருக்கிறது. தரைத்தளத்தில் பயணிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் அலுவலகங்கள் அமைய இருக்கின்றது. மாடிகளில் ரயில்வே சேவை அலுவலகங்கள் அமையும். முதல் தளத்தில் பயணிகள் காத்திருப்பு அரங்கு அமைகிறது. 250 வாகனங்கள் (கார்) நிறுத்தும் வகையில் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயில் பகுதியில் பல்லடுக்கு வாகன காப்பகம் அமைக்கப்பட உள்ளது. 2 ஆயிரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் கிழக்கு நுழைவாயில் பல்லடுக்கு வாகன காப்பகம் அமைகிறது. பார்சல் சேவைக்காக தனி நடை மேம்பாலம் அமைக்கப்படுகிறது. மேலும் ரயில் நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையும் அமைய இருக்கிறது. இருசக்கர வாகனம் ஆட்டோ, கார் போன்றவை சென்று வர தனித்தனி பாதைகள் அமைக்கப்படும். ஆறு நடைமேடைகளும் புதிய மேற்கூரை மற்றும் பயணிகள் வசதிகளுடன் புணரமைக்கப்பட இருக்கிறது. தற்போது உள்ள இரு நடை மேம்பாலங்களும் மேம்படுத்தப்படும். மேற்கு நுழைவாயில் பகுதியில் உள்ள ரயில் நிலைய கட்டிடம் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கான உத்தேச செலவு ரூபாய் 440 கோடி ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.