tamilnadu

img

ஆளுநர் மூலம் உயர்கல்வியை கைப்பற்றும் முயற்சி ஒன்றிய பாஜக அரசின் பாசிசக் கொள்கை

திருவனந்தபுரம், நவ.15- உயர்கல்வித் துறையை ஆளுநர் மூலம் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் ஒன்றிய அரசின் பாசிசக் கொள்கைகளை எதிர்க்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். திருவனந்தபுரம் ஆளுநர் மாளிகை முன்பு கல்வி பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் பிரம்மாண்டமான பேரணி-பொதுக்கூட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று (நவ.15) அருங்காட்சியகம், தைக்காடு விருந்தினர் மாளிகை முன்பிருந்து பேரணி புறப்பட்டது. தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் அணிவகுத்தனர். பொதுக் கூட்டத்தை துவக்கி வைத்து சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:  சாதி, மத பேதமின்றி மனிதனை மனிதனாக  மட்டும் பார்க்கும் நாட்டின் அபூர்வமான மாநி லங்களில் ஒன்று கேரளம். இங்கும் கல்வித்துறையை காவிமயமாக்க ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக ஆளுநரை ஒன்றிய அரசு ஆயுதமாக்கி வருகிறது என்றார்.

கேரளா அறிவு சமுதாயமாக மாறுவதை பாஜக எதிர்க்கிறது. உயர்கல்வித் துறையில் சாதனை படைத்த மாநிலம் கேரளா. யுஜிசி வழிகாட்டுதல்கள் விதிக்கப்படுகின்றன. ஆளுநர் மாளிகைகள் பாஜகவின் அரசியல் நிறு வனங்களாக மாறிவிட்டன. நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்க ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது என்று யெச்சூரி கூறினார். எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களி லும் இதே நிலைதான். எதிர்ப்பு தனிப்பட்டது அல்ல, கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் என்பதை இது காட்டுகிறது. கேரளாவின் உயர்கல்வி மட்டும் பிரச்சனை இல்லை. இதுபோல் மேற்கு வங்கம், தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும் இதுபோன்ற பிரச்சனைகள் உள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் விருப்பப்படி அல்லாமல் ஆளுநர் தான்விரும்பி யதை எல்லாம் செய்ய முற்படுகிறார். அதையொட்டி மேற்கு வங்கத்திலும் தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழக வேந்தர் நியமனம் தொடர்பாக சட்டமன்றங்களில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. தெலுங்கானாவில் சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டன. மகாராஷ்டிரத்திலும், தமிழ்நாட்டிலும் இதே நிலைதான் உள்ளது. இது மத்திய மாநில உறவை பாதிக்கும் ஒரு பிரச்சனை. கல்வி  பொதுப் பட்டியலில் வைக்கப்பட்ட ஒன்றாகும். மாநில அரசுகள் சட்டமன்றத்தில் விவாதித்து பல்கலைக் கழகங்களுக்கான விதிமுறைகளை உருவாக்குகின்றன. ஆனால், ஒன்றிய அரசுக்கு பொதுவான ஒரு வழிகாட்டுதலை மட்டுமே யுஜிசி அளித்துள்ளது. எனவேதான் மாநில அரசுகள் உருவாக்கிய சட்டங்களே நிலைக்கத்தக்கது என்கிறோம். அதுதான் ஜனநாயகம்.  

1948 இல் ஐதராபாத் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நேரு பேசுகையில், பல்கலைக் கழகங்கள் மனிதாபிமானம், சகிப்புத்தன்மை, அறிவியல் கண்ணோட்டம், புதிய கண்டுபிடிப்பு களுக்கு வழிவகுக்க வேண்டும்  என தெரி வித்தார். கொள்கை வழி  அத்தகைய நிலைப் பாட்டை ஆர்எஸ்எஸ் அங்கீகரிப்பதில்லை. அவர்களது நிகழ்ச்சி நிரல் இந்துத்துவா வாக மாற்றுவது என்பதே ஆகும். அறி வியலுக்கு எவ்வித இடமும் அதில் இல்லை.  இந்தியாவை இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். அறிவியல் பார்வை யை மேம்படுத்துவதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் பிற்போக்கான மூடநம்பிக்கைகளை முன்னிறுத்த விரும்பு கின்றனர். ஐதராபாத், ஜாமியா மிலியா போன்ற மத்திய பல்கலைக்கழகங்களில் அதற்கான முயற்சியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு எதிரான வலுவான போராட்டம் இங்கே நடத்தப்படுகிறது என்றார்.    ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பொதுக் கூட்டத்துக்கு டாக்டர் இக்பால் தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆனாவூர் நாகப்பன் வரவேற்றார். இடது ஜனநாயக முன்னணி தலைவர்களான எம்.வி.கோவிந்தன், கானம் ராஜேந்திரன், மாத்யூ தாமஸ், ஜோஸ் கே மாணி, பி.சி.சாக்கோ, கடனப்பள்ளி ராமச்சந்திரன், பி.சி.ஜோசப், ஸ்ரேயன்ஸ் குமார், கே.வி.கணேஷ் குமார், பினாய் ஜேக்கப் உள்ளிட்டோர் பேசினர்.