சுருக்குமடி வலையை தடைசெய்ய வேண்டும் தரங்கம்பாடி மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்
மயிலாடுதுறை, செப்.2- மயிலாடுதுறை மாவட்டத்தில் 28 மீனவக் கிராமங்கள் உள்ளன. கிராமங்கள் தனித்தனி அணியாக பிரிந்து, சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தரங்கம்பாடி தலைமையில், மீனவக் கிராமங்கள் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனத்தை பாதுகாக்க சுருக்குமடி வலை, இரட்டை மடிவலை மற்றும் அதிவேக திறன் கொண்ட எஞ்சின் படகுகளை பயன்படுத்தி வருவதை தடை செய்ய வலியுறுத்தி மீனவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இதையொட்டி பூம்புகார், சந்திரபாடி மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை தடை செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட தலைமை மீனவர் கிராம தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் தலைமையில், 26 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலை, இரட்டை மடிவலை, அதிவேக திறன்கொண்ட படகுகளை தடை செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு, மீன் வளத்துறை மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமையில் மீனவர்கள் தரங்கம்பாடி கடலில் இறங்கி 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 600 பைபர் படகுகளில் கருப்புக் கொடி கட்டியும், மீனவர்கள் கையில் கொடிகளை ஏந்தியும், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை தடை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கக் கோரி ஆயிரக்கணக்கான மீனவர்கள், தரங்கம்பாடி பேருந்து நிலையம், ராஜுவ்புரம் முக்கூட்டு சென்னை- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தரங்கம்பாடி பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்களிடம் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை, மீன்வளத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார், வட்டாட்சியர் சதீஷ்குமார் மற்றும் அதிகாரிகள், “எழுத்துப் பூர்வமாக பேச்சுவார்த்தையில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.