tamilnadu

img

சண்டைக் காட்சிகள் குறித்த வழக்கு...

திரைப்படங்களில் சண்டைக் காட்சிகள் வருபொழுது திரையில் அதுகுறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெறச்செய்ய வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஏற்கெனவே திரைப்படங்களில் மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் போன்ற காட்சிகள் வரும்போது அதற்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாசகங்கள் திரையில் வருவது அனைவரும் அறிந்ததுதான். அதுபோலவே சண்டைகள் போன்ற வன்முறைக் காட்சிகளைக் காட்டுகிறபோதும் அதற்கெதிரான வாசகங்களைக் காட்டவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொளத்தூர் வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவரது அந்த மனுவில் வன்முறை, கொலை, கொள்ளை முதலான சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் 16 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களாகவே உள்ளனர். இவற்றில் ஈடுபட அவர்களுக்கு எந்தவிதத் தயக்கமும் இருப்பதில்லை. இதற்கு அடிப்படையாக திரைப்படங்களில் வரும் வன்முறைக் காட்சிகள் அமைந்துள்ளன. திரையரங்கை நோக்கி ரசிகர்களை ஈர்ப்பதற்காக பெரிய நடிகர்களே இதுபோன்ற காட்சிகளில் நடிக்க விரும்புகின்றனர். இந்த வன்முறைக்காட்சிகளைப் பார்க்கும் இளைஞர்கள் அதன் உண்மைத் தன்மையைப் பகுத்துப்பார்க்க இயலாமல் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு தங்களது வாழ்வையே தொலைக்கின்றனர். அவர்களிடையே இதுவிசயத்திலும் விழிப்புணர்வு ஏற்பட வன்முறைக் காட்சிகள் வரும்பொழுது இதில் பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் வெறும் அட்டை போன்றவற்றால் செய்யப்பட்ட டம்மிதான். சிவப்பு நிறத்தில் சிந்துவது உண்மையில் ரத்தமல்ல... வெறும் கலர் பவுடர்தான் என்பதுபோல வாசகங்கள் காட்டப்பட வேண்டும் என உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதிமுனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நிதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. திரைப்படங்களைப் பார்த்துத்தான் பள்ளி மாணவர்கள் தங்கள் புத்தகப் பைகளில் கத்தி போன்ற ஆயுதங்களை மறைத்து வருவதாகத் தெரிவித்தார்.  அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிகள் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தனர். மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ள மனுதாரர் அனுமதி கோரினார். அனுமதியளித்த நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். எனினும் வழக்கின் நியாயங்கள் மறைந்துவிடவில்லைதானே?