மாணவரை தாக்கிய சத்துணவு ஊழியர்கள் கைது
திருவண்ணாமலை, ஏப்.5- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்குணம் கொல்லை மேடு அரசு தொடக்கப் பள்ளியில், சத்துணவு வழங்கிய போது முட்டை கேட்ட 5 ஆம் வகுப்பு மாணவனுக்கு `இல்லை எனச் சொல்லியிருக் கின்றனர். ஆனால், சமையல் கூடத்தில் மறைத்து வைக்கப் பட்டிருந்த முட்டைகளை அந்த மாணவன் கண்டுபிடித்ததால் கோபமடைந்த சத்துணவு சமையலர் லட்சுமி, சமையல் உத வியாளர் முனியம்மாள் ஆகி யோர் அந்த மாணவனை துடைப்பத் தால் தாக்கும் காணொலிக்காட்சி வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பணி யிடை நீக்கம் செய்யப்பட்ட இரு வரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீலகிரியில் 2 நாள் முதல்வர் கள ஆய்வு
சென்னை,ஏப்.5- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தற்போது, சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், இரண்டு நாட்கள் கள ஆய்வுக்கு சனிக்கிழமை (ஏப்.5) காலை விமானம் மூலம் புறப்பட்டார். தொடர்ந்து நீலகிரி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள், தொண்டர்கள் என அனைவரும் உற்சாக வரவேற்பளித்தனர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) அன்று உதகை அரசு கலைக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன்படி, நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட ரூ.494.51 கோடி மதிப்பீட்டில் 1,703 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.130.35 கோடி மதிப்பீட்டில் 56 புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு கிறார். ரூ.102.17 கோடி மதிப்பீட்டில் 15,634 பயனா ளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மோடி வருகை : உச்சக்கட்ட பாதுகாப்பு
இராமேஸ்வரம்: இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 அன்று திறந்து வைக்கிறார். இதனால் மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் பயணிக்கக் கூடிய வாகனங்களில் அதிகாரிகள் ஒத்திகை நடத்தினர்.
தமிழகத்துக்கு ரூ.522 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை: இயற்கை பேரிடர்களை சந்தித்த மாநிலங்களுக்கு ரூ. 1,280 கோடியை நிதி வழங்க ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், தமிழகத்திற்கு ரூ.522 கோடியும் , புதுச்சேரிக்கு ரூ.33 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜவுளி, செயற்கை இழை ஆராய்ச்சிக்கு இணையதளம்
சென்னை : ஜவுளி மற்றும் ஆடை தொழிலின் பலதரப்பட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன், தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையை இரண்டாகப் பிரித்து ஜவுளி மற்றும் ஆடை தொழில் பிரிவுக்காக தனியே “துணிநூல் துறை” துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொழில்நுட்ப ஜவுளி மற்றும் செயற்கை இழைகள் குறித்தான ஆராய்ச்சி மற்றும் வணிக மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு ரூ.25 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியுதவி பெறும் பொருட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இலகுவாக விண்ணப்பிக்க ஏதுவாக ஒற்றைச் சாளர இணையதள வசதியை (Single Online Portal) அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்.
ராமஜெயம் கொலை வழக்கு : 4 பேர் பணியிட மாற்றம்
சென்னை : திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து, விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த காவல் ஆய்வாளர் சண்முகவேலை திருச்சி மாநகர சைபர் க்ரைம் பிரிவுக்கும், தலைமைக் காவலர்கள் ராஜபிரபு, தனசேகரன் ஆகியோரை போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கும், தலைமைக் காவலர் பிலிப்ஸ் பிரபாகரனை மாநகர குற்றப்பிரிவு க்கும் மாற்றி திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் தங்களது விருப்பத்தின் பேரில் இடமாறுதல் உத்தரவை பெற்றதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு பதில் யாரும் நியமிக்கப்படவில்லை. 14 ஆண்டு காலம் கடந்தும் இந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.