சென்னை, மார்ச் 12- அரசுப்பள்ளி மேலாண்மைக்குழுக்களை தேர்வு செய்வது குறித்து வரும் மார்ச் 20ஆம் தேதி பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக அமைக்கப்படும் பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள் குறித்தும் அதில் பெற்றோர் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிகழ்வு தமிழகம் முழுவதும் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளில் மார்ச் 20 ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்தப் பள்ளிகளில் நடைபெறும் இந் நிகழ்வில் மொத்தம் 52 லட்சம் பெற்றோர்கள் கலந்து கொள்கிறார்கள். தமிழகப் பள்ளிக் கல்வி வரலாற்றில் இது முக்கியமான மைல் கல் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, புதிய பள்ளி மேலாண்மைக் குழு செயல்படத் தொடங்கும்.
இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பள்ளி மேலாண்மைக் குழுவின் செயலபாடுகளை மேற்கொள்வதற்காகவும் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானங்களைப் பொது மக்களுக்குத் தெரிவிப்பதற்காகவும் பள்ளிக் கல்வித் துறை உருவாக்கிய புதிய செயலியை அமைச்சர் வெளியிட்டார். அத்துடன், பள்ளிக் கல்வி மேலாண்மைக்குழுவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக தமிழ் ராப் பாடகர் அறிவு எழுதிப் பாடியுள்ள பரப்புரைப் பாடலையும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சி விளம்பரத்தையும் அவர் வெளியிட்டார். பள்ளிகளில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் பெற்றோர் ஆசிரியர் கழகம் என்பது பள்ளிகளின் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஓர் அமைப்பு. பள்ளி மேலாண்மைக்குழு என்பது 2009ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒட்டுமொத்த பள்ளியின் வளர்ச்சிக்காக இயங்கும் குழுவாகும். பள்ளியில் என்ன நடக்கிறது, குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் என்பது பெற்றோருக்குத் தெரிய வேண்டும்.
குழந்தைகளின் குடும்பச் சூழல் என்ன அவர்களின் உடல், மன, அறிவு வளர்ச்சிக்கு என்ன தேவைப்படுகிறது என்பது ஆசிரியர்களுக்குத் தெரிய வேண்டும். இதற்காக ஆசிரியர்களும் , பெற்றோர்களும் குழந்தையின் வளர்ச்சிக்காகப் பாடுபட வேண்டியது அவசியம். அதை மனதில் கொண்டுதான் குழந்தைகளுக்கான இலவசக், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009, பள்ளி மேலாண்மைக் குழுவை அமைக்க வேண்டியதைச் சட்டப் பூர்வமாக்கியுள்ளது. தாயின் அரவணைப்பில் குழந்தைகள் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வரலாற்றுப் பார்வைதான், பெற்றோர்களின் அரவணைப்பில் பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பதன் அவசியத்தை முக்கியமானதாக ஆக்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நம் பள்ளி, நம் பெருமை, பள்ளிகளின் பெருமையை வலுப்படுத்தி நமது குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க, இது ஊர்க் கூடி தேர் இழுக்கும் முயற்சி. அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைப் படிக்க வைக்கும் பெற்றோர்கள் மட்டுமல்ல, அந்த ஊரில் உள்ள அனைத்து மக்களும் தமிழக அரசின் இந்த முயற்சிக்குக் கை கொடுக்க முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.