மதுரை,மே 12- உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னரும் அஞ்சல் துறை தேர்வு முடிவுகள் வெளி வருவதில் தாமதம் ஏன்? என்று கேள்வி எழுப்பி ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்விற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: அஞ்சல் சேவை பிரிவு 2 துறைத் தேர்வுகள் 29.11.2020 இல் நடத்தப்பட்டது. மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தால் முதலில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு பின்னர் கேரள உயர்நீதிமன்றத்தால் நீக்கப்பட்டது. இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தாலும் (எஸ்.எல். பி 5030/2022) 04.03.2022 அன்று உறுதி செய்யப்பட்டு 3 வாரங்களுக்குள்ளாக அமலாக்குமாறு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதில் 2 ஆயிரம் தேர்வர்கள் உள்ளனர் என்றும், தேர்வு முடிவுகள் தாமதமாவதால் 100 அஞ்சல் மாவட்டங்களில் மக்கள் சேவை பாதிக்கப்படுவதாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது. நாட்டின் உச்சபட்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் ஏன் தாமதம்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.