tamilnadu

img

மோடிக்கு ‘செங்கோல்’ தந்த தருமபுரம் ஆதீனத்திற்கு நேர்ந்த கதி

மயிலாடுதுறை, பிப். 29 - தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடி யோவை வெளியிட்டு விடுவோம் என்று கூறி, மயிலாடுதுறை மாவட்டத் தலைவராக இருக்கும் அகோரம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், ரூ. 40 கோடி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை, கொள்ளை பின்னணி கொண்ட பாஜக தலைவர் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சம்பவங்களில் தொடர் புடையவர் அகோரம். பூம்புகார் அருகேயுள்ள ராதாநல்லூர் ஊராட்சி, இளையமதுகூடம் கிராமத்தை சேர்ந்த இவர், தற்போது திருவெண்காடு பகுதியில் வசித்து வருகிறார்.  பாஜக-வின் மயிலாடுதுறை மாவட்டத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இதற்கு முன் பாமக-வில் மாநில பொறுப்பில் இருந்த போது, பாமக-காரர் ஒருவரையே கொலை செய்த வழக்கில் சிக்கி- அதற்காக பாஜக கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அகோரம். பின்னர், எச். ராஜா, அண்ணாமலை ஆகியோரு டன் நெருக்கமாகி, பாஜக-வில் இணைந்து அதில் மாவட்டத் தலைவராக பதவி வகிக்கிறார்.

தருமபுரம் ஆதீனத்தின் சகோதரர் போலீசில் புகார்

இந்நிலையில்தான் தருமபுரம் ஆதீன மடாதிபதியாக உள்ள மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமியின் சகோதர ரான- திருக்கடையூரில் வசிக்கும் விருத்தகிரி,  மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப் பாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.  அந்த புகாரில், பாஜக தலைவர் அகோரம் உள்ளிட்ட 9 பேர் தருமபுரம் ஆதீனம் தொடர்பான ஆபாச வீடியோ உள்ளதாகவும், அதை வெளி யிட்டு விடுவோம் என்றும் கூறி, பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டுள் ளார்.

ஆபாச வீடியோவை வெளியிட்டு அவமானப்படுத்துவோம்!

மேலும், அந்தப் புகாரில் “பாஜக தலைவர் அகோரம், ஆடுதுறையை சேர்ந்த வினோத், தருமபுரம் ஆதீனத்திடம் பணிவிடையாக (உதவியாளர்) இருக்கும் திருவையாறு செந்தில் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து, தன்னிடம் ‘தருமபுரம் ஆதீனகர்த்தர் சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோ உள்ளது; தான் கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களிலும், டிவி சேனல்களிலும் அந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை வெளி யிட்டு ஆதீன மடத்தையும், மடாதிபதியையும் அவமானப்படுத்தி விடுவேன்; 

பணம் கொடுக்காவிட்டால் கொலையும் செய்வோம்!

‘திருவெண்காடு சம்பக்கட்டளையை சேர்ந்த ரவுடி விக்னேஷ் (பாஜக பிரமுகர்) உங்களிடம் பேசுவார்; ஒருவேளை பணம் கொடுக்காமல் போலீசாரிடம் சென்றால் விக்னேஷ் மூலம் ரவுடிகளை கொண்டு மடத்தை சார்ந்தவர்களை கொலை செய்யக் கூடத் தயங்கமாட்டோம்’ என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டி பல முறை என் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்தனர். நான் உயிருக்கு பயந்து மடத்தில் உள்ளவர்களிடம் பேசி பணம் பெற்றுத் தருவதாக தெரிவித்தேன்.  பின்னர் இதுதொடர்பாக பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்ட முக்கிய நபர்களின் தூண்டுதலின் பேரில் வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோர் என்னைத் தொடர்பு கொண்டு மடத்தினர் தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதனை வெளியிடாமலிருக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் (ரூ. 40 கோடி)தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என மிரட்டினர்.

பாஜக-வினர் அச்சுறுத்தலால்   மன உளைச்சலில் மடாதிபதி

இவ்வாறு தாங்கள் ‘கேட்கும் தொகையை கொடுத்து பிரச்சனை இல்லாமல் விசயத்தை முடிக்குமாறும், வீணாக ரவுடிகளான எங்களிடம் பிரச்சனை வைத்துக்கொள்ளாதீர்கள்; தாங்கள் சொல்வதை செய்யக்கூடியவர்கள்’ என்று  எங்களை அச்சுறுத்தும் வகையில் பேசி, மடாதி பதியின் நேர்முக உதவியாளர் செந்திலின் கூட்டோடு மன உளைச்சல் ஏற்படுத்துகின்றனர். இவர்களின் இந்த அச்சுறுத்தலால் மடாதி பதியும் மடத்தில் உள்ளவர்களும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டு என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவிப்பில் உள்ளோம்.  எனவே, காவல்துறை தலைவர் மடத்தினர் சம்மந்தப்பட்ட ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும், கேட்டும் பணத்தை கொடுக்காத பட்சத்தில் அதை வெளியிட்டு மடத்திற்கும் மடத்தில் உள்ள வர்களுக்கும் கெட்டப்பெயர் உண்டு பண்ணு வோம்; மீறினால் மடத்தில் உள்ளவர்களை கொலை செய்து விடுவோம் என்று ஆபாச வார்த்தைகளால் மிரட்டிய மேற்படி நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என விருத்தகிரி புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

ரவுடிகள் 4 பேர் கைது; பாஜக தலைவர் தலைமறைவு

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு ஆடுதுறை வினோத், விக்னேஷ், ஸ்ரீநிவாஸ் ஆகிய 4 பேர்களைக் கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அவர்கள் மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள பாஜக மாவட்டத் தலைவர் அகோரம், தருமபுரம் ஆதீன பணி விடை செந்தில், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், பிரபாகரன் உள்ளிட்ட 5 பேரை தேடி வருகின்ற னர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தலில் போட்டியிடுவதற்காக  ரூ. 20 கோடி கேட்ட அகோரம்

தருமபுரம் ஆதீனத்திடம் கேட்கப்பட்ட 40 கோடி ரூபாய் பணத்தில், தனக்கு மட்டும்  20 கோடி பணம் வேண்டுமென்றும் அதை வைத்துத்தான் நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போகிறேன் என்றும் பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் கூறியதாக தெரிகிறது. பிரதமர் மோடிக்கு நேரில் சென்று செங்கோல் வழங்கிய ஆதீனங்களில் தருமபுரம் ஆதீனம் முக்கியமானவர். பட்டினப் பிரவேசம் என்ற நிகழ்ச்சியை நடத்தி மனிதர்கள் சுமக்கும் பல்லக்கில் ஆதீனம்  அமர்ந்து கொண்டு  நகர்வலம் வரும் நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கக் கோரி முற்போக்கு அமைப்புகள் போராட்டம் நடத்தியபோது, பல்லக்கு சுமக்கும் நிகழ்ச்சிக்கு தடைவிதித்தால் நானே சென்று பல்லக்கை தூக்கிக்கொண்டு சுமப்பேன் என்று அப்போது வீர வசனம் பேசியவர், பாஜக தலைவர் அண்ணா மலை. தற்போது அவரது கட்சியைச் சேர்ந்த மாவட்டத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளே ஆபாச ஆடியோ- வீடியோ இருப்பதாக தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி ரூ. 40 கோடி பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பயமுறுத்தி  பணம் பறிக்கும் பாஜக!

தங்களிடம் உள்ள வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை ஏவிவிட்டு நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாயை பாஜக மிரட்டிப் பறிப்பதாக அண்மை யில் ஆதாரங்களுடன் செய்தி வெளியாகின. பாஜக-வினரும் தனியாக வசூல் வேட்டை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவை அனைத்தும் உண்மைதான் என்பதை தருமபுர ஆதீன விவகாரமும் தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.

- ஜான்சன்