tamilnadu

img

திருச்சி உட்பட 5 கோவில்களுக்கு விரைவில் ரோப் கார் வசதி

சென்னை, மார்ச் 23- தமிழ்நாட்டில் திருச்சி, திருக்கழுகுன்றம், திருநீர்மலை உள்ளிட்ட ஐந்து கோவில்களில் ரோப் கார் வசதி செய்து கொடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக உறுப்பினர் அம்மன் அர்ஜூனன், “கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு கம்பி வட ஊர்தி வசதி செய்து தர அரசு முன் வருமா? என்றார். இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, “கம்பிவட ஊர்தி அமைப்பது குறித்து பொதுப்பணித் துறை சார்பில் நடந்த மண் பரிசோ தனை முடிவில் சாத்தியக்கூறு இல்லை என்று கூறப்பட்டது. எனவே அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், மின்தூக்கி  ( லிப்ட்) செய்து கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளது. மிக விரைவில் பணிகள் முடிக்கப் பட்டு மக்களின் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

பழனிக்கு 2வது ரோப்கார்!

பழனி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார்,“பழனி தண்டாயுதபாணி கோவில் இரண்டாவது ரோப் கார் அமைக்கும் பணி விரைந்து முடிக்கப்படுமா என்று  கேள்வி எழுப்பினார்? இதற்கு பதிலளித்த அமைச்சர்,“ 70 கோடி ரூபாய் செலவில்  நடைபெற்று வரும் இரண்டாவது ரோப்கார் அமைக்கும் பணி 18 மாதங்களில் அதாவது 2024 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.

திருச்சி மலைக்கோவிலுக்கு ரோப்கார்

திமுக உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,“திருச்சி உச்சி  பிள்ளையார் கோவிலுக்கு வசதி செய்து கொடுக்கப்படுமா என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர்,“திருச்சி மலைக் கோவில் மட்டுமல்ல செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் மாவட்டம் திருநீர்மலை, போளூர் லட்சுமி நரசிம்மர்  கோவில் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு வசதி செய்து கொடுக்க தொழில்நுட்பக் குழு ஒப்புதல் அளித்துள்ளது இதனால் விரைவில் அந்த பணிகள் செய்து முடிக்கப்படும் என்றார்.