சிறுபான்மை மக்கள் திட்டமிட்டு கட்டம் கட்டப்படுகின்றனர். அதற்கு மோடி அரசு துணை போகிறது என்று அரசை திரைக்கலைஞர் ரோகினி கடுமையாகச் சாடினார்.
மதுரையில் நடைபெற்று வரும் மாநில மாநாட்டையொட்டி புதனன்று நடந்த செந்தொண்டர் அணிவகுப்பையொட்டி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ரோகினி பேசியதாவது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள். நடத்தி வரும் போராட்டங்களை நினைத்தால் இது எப்படிப்பட்ட இயக்கம் என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன், பலரிடம் கேட்டிருக்கிறேன். கொள்கைகளை படித்துள்ளேன். செங்கொடி இயக்கம் எத்தகைய தியாகங்களைச் செய்துள்ளது என்பதை நினைக்கும் போது எனக்குள்ளே ஒரு உத்வேகம் எழுந்தது. பள்ளிப் பாடப்புத்தகத்தில் மாணவர்களுக்கு ஒரு சில தலைவர்களைப் பற்றி மட்டுமே சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். ஒரு சில பேர் மட்டும் போராடியிருந்தால் சுதந்திரம் கிடைத்திருக்குமா? ஒவ்வொரு வீதியிலிருந்தும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும் புரட்சியாளர்கள் வந்திருக்கிறார்கள். தன்னலமில்லாமல், ஓசையே இல்லாமல், விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் சுதந்திரத்திற்காக போராடியிருக்கிறார்கள் தியாகம் செய்திருக்கிறார்கள். அந்தத் தியாகிகளை பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்கு மக்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் கிடைத்திருக்கிறது.
சுதந்திரப் போராட்ட காலம் போலவே இன்றும் நாம் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சொன்னது உண்மையான வார்த்தைகள். நாம் சுதந்திர இந்தியாவில் தான் இருக்கிறோமா என்ற என்ற சந்தேகம் எழுகிறது.
யார் படிக்க வேண்டும்?. யார் படிக்கக்கூடாது? என்பதை மிகத் தீவிரமாக ஆட்சியாளர்கள் செயல்படுத்தி வருகிறார்கள். நீ ஹிஜாப் போட்டிருக்கிறாயா? உனக்கு படிக்க உரிமை இல்லை என்கிறார்கள். ஹிஜாப் போட்ட மாணவிகளை தேர்வு எழுதவிடாமல் செய்திருக்கிறார்கள். அந்த மாணவிகள் ஹிஜாப் அணிவதுஅவர்களது உரிமை. அவர்களுக்கு தேர்வு எழுத தடையாக இருப்பது பொருளாதாரம் அல்ல. படிக்க இயலாத நிலையும் இல்லை. ஹிஜாப் பெயரில் அந்த மாணவிகளின் எதிர்காலக் கனவை கலைத்துவிட்டார்கள். ஹிஜாப் அணிந்த சில மாணவிகளை தேர்வு எழுத அனுமதித்த ஆசிரியர்களை இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.
சிறுபான்மை மக்களை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இதுக்கு ஒரு அரசே துணை போகிறது. கலை வடிவங்கள் மூலமும் மக்களுக்கு எது நல்லது என்பதை எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது. இருண்ட காலத்தில் வாழ்ந்த மக்களின் நிலை, அவர்கள் முன்னேற்றம் குறித்து எடுத்துச்சொல்வது தான் கலை.
காஷ்மீர் ஃபைல்ஸ் படம் எடுத்திருக்கிறார்கள். ஒரு திரைப்படம் வெளியிடும் போது செய்தியாளர்களை பார்க்கச்சொல்வோம். அதை பி.ஆர். ஒர்க் என்பார்கள். இன்றைக்கு பி.ஆர். ஒர்க் நாடாளுமன்றத்திலும் கூட நடைபெறுகிறது. மன்கிபாத்திலும் நடைபெறுகிறது.
அழகர் ஆற்றில் இறங்குவது போல நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக நாம் களத்தில் நிற்கிறோம். பாதிக்கப்படக்கூடிய மக்கள் கம்யூனிஸ்ட்டுகளைத்தான் அழைக்கிறார்கள்.மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்து வைப்பவர்கள் தோழர்கள்.
மாநாட்டிற்கு வருகை தந்துள்ள தோழர்கள் இந்தியாவிற்கு வந்த பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். ஒரு அரசு உருவாகும் போது அந்த அரசில் கம்யூனிஸ்ட்டுகள் இடம் பெற வேண்டும் என்று ஒரு முறை கலைஞரே சொல்லியிருக்கிறார். அனைத்துத் துறைகளிலும் உள்ள நமது தோழர்கள் வெகுண்டெழ வேண்டும். நமக்கு முன்னே இருக்கும் பாதை மிகக் கடுமையான பாதை. எவ்வளவு போராடினாலும் துவண்டு போக மாட்டார்கள் தோழர்கள் என்பதற்கு தமிழ்நாடு ஒரு சான்று என்றார்.