சென்னையின் மையப் பகுதியான மயிலாப்பூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்தில் கோவிந்தசாமி நகர் உள்ளது. இங்குள்ள இளங்கோ தெரு பக்கிங் காம் கால்வாய்க்கு இணையாக தெற்குபுறம் கிரீன்வேஸ் சாலை - காமராஜர் சாலையை இணைக்கும் வகையில் 40 அடி அகல சாலை 600 மீட்டர் செல்கிறது. பக்கிங்காம் கால்வாயிலிருந்து 55 அடி அப்பால் உள்ள இந்த தெருவில் வசித்து வருகின்ற ஏழைகளின் குடி யிருப்புகளை கொடூரமான முறையில் அரசு எந்திரம் வெளியேற்றியது ஆழமான சோகத்தின் வலியாக உள்ளது. இடமாற்றக் கொள்கையானது குடியிருப்போருக்கான மனிதா பிமான காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. 1949-ல் செம்மண்ணாக இருந்த பகுதியில் காமராஜர் நகர் என பெயரிட்டு கடந்த 70 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் திட்டத்தின் மூலம் சாலை, மின் இணைப்பு, கழிவுநீர் கால்வாய் என அடிப்படை தேவைகள் செய்துதரப்பட்ட பகுதியாகும்.
யார் பக்கம் அதிகாரிகள்?
பலமுறை தீப்பற்றி எரிந்த வீடுகளில் இருந்த மக்கள் வாழ்வுரிமைக்காக போராடினர். அப்போது மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.கே.கபாலி தலையிட்டார். குடிசை மாற்று வாரியம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளந்து கொடுத்த பகுதிதான் கோவிந்தசாமி நகர். 6 3/4 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோவிந்தசாமி நகரில் இளங்கோ தெரு, கட்டபொம்மன் தெரு, கரிகாலன் தெருக்களில் 1600 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்தச் சூழ்நிலையில்தான் ராஜீவ்ராய் என்பவர் தன்னுடைய ரியல் எஸ்டேட் தொழிலுக்காக 2006-ல் பொது நல வழக்கை தாக்கல் செய்தார். 2008-ல் 625 வீடுகளை ஆக்கிரமிப்பு எனக்கூறி அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையின்போது, அதிகாரிகள் உரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். இதற்கு மாறாக அதிகாரிகள் செயல்பட்டனர். அங்கீகரிக்கப்பட்ட குடிசை பகுதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட எஸ்சிபி 25401 – 25403/2009 வழக்கு அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு, அவமதிப்பு வழக்கு என நடைபெற்றது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 366 குடும்பங்கள் மட்டுமே ஆக்கிர மிப்புகள் என பயனாளிகள் பட்டி யல் தயாரித்தது.
அதன்படி, 9-1-2014-ல் 366 குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பின்னர் குடிசை மாற்று வாரிய தலைவர், பொதுப்பணி துறையினரிடமிருந்து பயனாளிகள் பட்டியல் பெறாமல் ஜி6/11928/2008 நாள் 30-12-2014 இளங்கோ தெருவில் உள்ள 259 குடும்பங்களுக்கு, குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்து செயல்முறை ஆணை பிறப்பிக்கிறார். நீர்வழியில் இருந்து 55 அடி தூரம் சாலைக்கு அப்பால் வசிக்கும் குடியிருப்புகள் நீர்வழிக்கு இடையூறாக இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோவிந்தசாமிநகர மக்கள் தெரிவித்தனர், அதை விசாரித்த உச்சநீதிமன்றம் 11-7-20014-ல் சென்னை நீதிமன்றத்தில் தீர்வு காண அறிவுறுத்தியது. அதன் பெயரில் 25-7-2015-ல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு புதிய முடிவு எடுக்க பொதுப்பணித்துறை, குடிசை மாற்று வாரியத்திற்கு உத்தரவு பிறப்பித்தது. மேற்படி உயர்நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தாததால் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் மற்றும் ஊர் மக்கள் சார்பில் தொடர்ந்த வழக்கு எண் ரிட்மனு 3224/2019-ல் வருவாய்த்துறை முடிவு எடுக்க 10 வாரகால அவகாசம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோவிந்தசாமி நகர் அங்கிகரிக்கப்பட்ட குடிசை பகுதி என குடிசை மாற்று வாரியமே 13.5.2019 அன்று டிநோட்டிபை செய்து அரசாணை பெறும் நடவடிக்கையில் இருந்ததால் வரன்முறை செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த தர்மேந்திர பிரசாத் 2-2-2006-ல் உச்ச நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் சமர்ப்பித்துள்ள வாக்குமூலத்தில் ராஜிவ்ராய் என்ற மனுதாரர் தனது சொந்த நிலத்தில் கட்டியுள்ள அடுக்குமாடி குடி யிருப்புகளின் விலையை ஏற்றி விற்கும் சுயநலத்திற்காக பல வழக்குகள் தொடர்ந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
அகற்றப்படும் இடம் யாருக்கு?
பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடம் அங்கீகரிப்பட்ட குடிசை பகுதி டி நோட்டிபை இன்னும் செய்யப்படவில்லை. இளங்கோ தெரு அருகே கூடுத லாக 9 முதல் 10 மீட்டர் வரை கால்வாயை அகலப்படுத்துவது உட்பட பல பிரிவுகளில் கால்வாய் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது. இது சென்னை நதிகள் மறு சீரமைப்பு அறக்கட்டளை ஆய்வுக்கு உட்பட்டது என்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அனுமதியும், தலையீடும், பக்கிங்காம் கால்வாய் தேசிய நீர்வழி 4ன் ஒரு பகுதியாக இருந்தாலும் சென்னை நகருக்குள் உள்ள சுமார் 50 கி.மீ. நீளத்தை மேம்படுத்த முடியாது என்று இந்திய உள்நாடு நீர்வழிகள் ஆணைம் கூறியுள்ளது.
பறக்கும் ரயில் தூண்கள் மற்றும் ரயில் நிலையங்கள், அரசு நிறுவனங்கள் நீர்வழி பாதையில்தான் உள்ளன. கஸ்தூரிபா மற்றும் இந்திரா நகர் குடியிருப்போர் நலமன்றம் தொடர்ந்த வழக்கில் 2016-ல் அரசு தாக்கல் செய்யப்பட்ட பிரமான பத்திரத்தில் பொதுப்பணித்துறை கால்வாயை 15 மீட்டர் வரை மட்டுமே விரிவுபடுத்தவும், சிஆர்பிடி-யின் ஒரு பகுதியாக தடுப்பு சுவர்கள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, எனவே, கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவையொட்டி தடுப்பு சுவர் அமைத்து நீர்வழி பாதை மேம் படுத்தும், சீராய்வு மனு தாக்கல் செய்வதோடு, வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதும்தான் நியாயமான தீர்வாக இருக்கும்.
ஊருக்காக உயிர் கொடுத்த கண்ணையன்
கடந்த ஏப்ரல் 28-ம் தேதி 500க்கு மேற்பட்ட காவல் துறையினருடன் அதிகாரிகள், புல்டோசர்களை கொண்டு வந்து அத்துமீறி, பெண்களை ஆபாசமாக பேசி புழு பூச்சிகளை போல கொடூரமாக வெளியேற்றினர். 10, 12வது படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத இருந்தநிலையில் அங்கு வசிக்கும் மக்களின் குறைந்தபட்ச உணர்வுகளை கூட புரிந்து கொள்ளாமல் அவர்கள் செயல்பட்டனர். புல்டோசர்களை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்திற்கு மத்தியில் ஊரை காப்பாற்ற எந்த வழியும் இல்லையே என ஏ.ஜி.கன்னையன் (வயது 58) தீக்குளித்தார். அவரின் மரண ஓலம் போராட்டத்தை போர்க்களாமாக மாறியது. தமிழகம் தழுவிய பிரச்சனையாக உருவெடுத்தது.
சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு
வாழ்வாதாரத்திற்கான போராட்ட களத்திற்கு வந்த நல்ல கண்ணு, கே.பாலகிருஷ்ணன் இரா.முத்தரசன், க.கனகராஜ், நாகை மாலி எம்எல்ஏ உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலை வர்களும், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரலெழுப்பினர். உயிரிழந்த கன்னையன் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் நிவாரணமும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருகிலேயே மந்தவெளி, மயிலாப்பூர் பகுதியில் வீடு வழங்கப்படும் சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார். முதலமைச்சர் கோவிந்த சாமி நகருக்கு வந்து சென்றி ருந்தால் உண்மை அவருக்கு புலப்பட்டிருக்கும். அதிகாரிகளின் சரியாக தலையீடு செய்யாததும், உண்மை தகவலை முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லாததும் வேதனையளிக்கிறது, இந்த நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் பல கி.மீ. தூரம் உள்ள படப்பை நாவலூர், பெரும்பாக்கம், கண்ணகி நகரில் வீடுகளை ஒதுக்குவோம் என தமிழக சட்டசபையில் முதல்வர் அறிவித்ததை ஏற்றுக் கொள்ள வில்லை. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரசின் அறிவிப்பை நீதிமன்றத்தில் தெளிவாக தெரிவிக்கவில்லை. அரசின் பலவகைப்பட்ட புறம்போக்கு நிலங்களில் வாழும் குடும்பங்களுக்கு பட்டா வழங்கக்கூடிய வகையிலும், நீதியும், சட்டமும் உண்மையின் பக்கம் இருப்பதையும் நிலை நிறுத்தவேண்டும். அரசு மக்களை அழைத்து பேச்சு நடத்தி சுமூக தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் நிலவகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரி வீதியில் இறங்கி போராடுகிறார்கள், எனவே நில வகை மாற்றம் செய்து பட்டா வழங்குவதே இப்பிரச்சனைக்கு ஒரே தீர்வாகும்,
எஸ்.குமார்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்
தென்சென்னை மாவட்டம்