tamilnadu

தொழில்நுட்ப நிபுணர் குழு அறிக்கை தாக்கல் 20,453 குடியிருப்புகளை இடித்து அகற்ற பரிந்துரை!

சென்னை, ஜன.25- திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் பலியான சம்பவம்  பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.   இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள  சேதம் அடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க கல்வித்துறை  உத்தரவிட்டது. பயன்பாட்டுக்கு தகுதி இல்லாத கட்டிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு இடிக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் பாதுகாப்பு கருதி அரசு இந்த நடவடிக் கையை உடனடியாக மேற்கொண்டது. இதேபோல மற்ற  துறைகளிலும் உள்ள பயன்படுத்தப்படாத சேதம் அடைந்த  கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்றும் அரசு உத்தர விட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அரசின் பல்வேறு துறைகளில் உள்ள பழைய கட்டிடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்தால் அவற்றை ஆய்வு செய்து  இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை திருவொற்றி யூரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்தது. இதில்  யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதைதொடர்ந்து அதன் அருகில் உள்ள 4 அடுக்குமாடி குடியிருப்புகளையும் இடிக்க அறிவுறுத்தி உள்ளது. இதுபற்றி சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசு  பேசும் போது, ‘‘பழுதான வீடுகள் மட்டுமின்றி, பயன்படுத்த தகுதி இல்லாத பழைய வீடுகளை இடிக்கவும் அதற்கு பதிலாக  புதிய வீடுகள் கட்டித்தரப்படும்’’ என்றும் அறிவித்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள குடிசை மாற்று வீடுகளை கணக்கெடுக்கும்பணி நடந்து வருகின்றன. தகுதியற்ற குடியிருப்புகளை படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. இடிக்கப்படுகிற பகுதிகளில் புதிய வீடுகள் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள குடிசை மாற்று  வாரிய வீடுகளை ஆய்வு செய்யும் பொறுப்பு அண்ணா  பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லுனர் குழுவிடம் கொடுக்கப்பட்டது. அக்குழுவினர் கடந்த ஒரு மாதமாக  குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்து அதன் அறிக்கையை  நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித் துள்ளது. தொழில்நுட்ப வல்லுனர் குழு அறிக்கையில் பரிந்துரை செய்துள்ள விவரங்கள் வருமாறு:- 25 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள குடியிருப்புகள் கணக்கெடுக்கப் பட்டது. 129 திட்டங்கள் மூலமாக 22 ஆயிரத்து  271 குடியிருப்புகள் கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது.  இதில் 20 ஆயிரத்து 453 குடியிருப்புகள் சேதம் அடைந்து  உள்ளதால் அவற்றை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வேண்டும். முதல்கட்டமாக இந்த வருடத்தில் 7 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி அவர்களை வெளியேற்ற வேண்டும். வரும் ஆண்டில் 15 ஆயிரம் வீடுகள்  அடையாளம் காணப்பட்டு அங்குள்ளவர்களை இடமாற்றம் செய்து குடியிருப்புகளை இடிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.