சென்னை, நவ. 1- பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டா லின் அறிவுறுத்தினார். வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு இயல்பாக 448 மி.மீ. மழை கிடைக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை யின்படி, தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இயல்பான மழை அளவை விட கூடுதலாக 35 முதல் 75 விழுக்காடு வரை மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம்29ஆம் தேதி முதல் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. எனவே இந்த நிலையில், மாநிலத்தில் அதிக கனமழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ளதால், பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம்செவ்வாயன்று (நவ. 1) ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.
அப்போது, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும் . மருத்துவமனை கள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் கைப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளுக்கு தாமதமின்றி மீட்புப் படையினை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே முகாமிட்டு நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைத்து தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பாதிப்பு க்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதி யோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், பழுதடைந்த, பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார். முகாம்களில் தங்க வைக்கப்படும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப் படும் பால், ரொட்டி, உணவு, மருந்து கள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்யவும், மழைக்காலங்களில் தொற்று நோய்கள், டெங்கு போன்றவை பரவாமல் தடுக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கினார்.
நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தினார். மழையால் பாதிக் கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளைத் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அரசு துறை அலுவலர்க ளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மு. மகேஷ் குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபு ரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டி னம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீல கிரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.