tamilnadu

எட்டு மணி நேர வேலைக்காக உயிர்நீத்த புதுவை தியாகிகள்

எட்டு மணி நேர வேலைக்காக உயிர்நீத்த புதுவை தியாகிகள்

பஞ்சாலைத் தொழிலாளர்கள் சூரிய உதயத்திற்கு முன் வேலைக்குச் சென்று சூரியன் மறைவுக்குப் பின் தான் வீடு திரும்ப முடியும்.  அன்றாடம் 14 மணிநேரம் உழைக்க வேண்டியிருந்தது. மிகக் குறைந்த கூலி, கடுமையான அடக்குமுறைகள் இருந்தன. இவ்வாறு அடக்குமுறைக்கும் சுரண்ட லுக்கும் இலக்கான தொழிலாளர்கள் மத்தியில் இளைஞர் வ.சுப்பையா செயல்பட்டு வந்தார். தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை உருவாக்க தோழர் அமீர் ஹைதர் கான் வந்தார். அப்போது சென்னையில் தலைமறைவாக இருந்த அவருக்கு புதுச்சேரி யில் கட்சியை உருவாக்க இளைஞர் சுப்பையாவின் அறிமுகம் கிடைத்தது. சுரண்டலுக்கு எதிராகப் போராட கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதல்படி தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட்டனர். 1936 ஜூலை 30ஆம் தேதி சவானா மில் தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை, சங்கம் அமைக்கும் உரிமைக்காக உள்ளிருப்புப் போராட்டம் துவங்கினார்கள். கடும்கோபம் கொண்ட பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பீரங்கி, துப்பாக்கிகளோடு இராணுவத்தைக் கொண்டு ஆலையைச் சுற்றி வளைத்தது. ரோடு ரோலர் கொண்டு சுற்றுச்சுவரை இடித்து உள்ளே நுழைந்த ராணுவம் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. தொழிலாளர்கள் சிதறி ஓடினர். பலர் கையில் கிடைத்ததைக் கொண்டு ராணுவத்தை எதிர்கொண்டனர். அன்றைய துப்பாக்கிச்சூட்டில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். பலர் கை கால் உடல் உறுப்புகளை இழந்தனர். புதுச்சேரி பிரதானச் சாலை ரத்தத்தால் தோய்ந்தது. ராணுவம் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக உலக நாடுகள் பலவும் கண்டனம் செய்தன. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் வலுவான கண்டனக்குரல் எழுப்பினர். தோழர் வ.சுப்பையா ஜவகர்லால் நேருவின் பரிந்துரைக் கடிதத்துடன் பிரான்ஸ் சென்றார். இந்தப் பின்னணியில்தான், எட்டு மணி நேர வேலை உரிமை சட்டமாக்கப்பட்டது. தெற்கு ஆசிய கண்டத்தில் புதுச்சேரியில் தான் முதன்முதலில் எட்டு மணி நேர வேலை உரிமை பெறப்பட்டது. இது மிக முக்கிய வரலாற்று நிகழ்வாகும். ஆனால் இப்படிப் போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை உரிமை ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கையால் தற்போது பறிபோய்க் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்த சமரசமற்ற போராட்டத்தைத் தொழிலாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டியது காலத்தின் அவசியம்.