நூறு நாள் வேலைக்கான ஊதியம் கேட்டு
திருக்காட்டுப்பள்ளியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 4 மாதமாக வழங்க வேண்டிய கூலியை கொடுக்காமல் நிறுத்தி வைக்கும் மோடி அரசைக் கண்டித்தும், கூலி பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என கோரியும் திருக்காட்டுப்பள்ளியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றிய அமைப்புக் குழு சார்பில், திருக்காட்டுப்பள்ளி இந்தியன் வங்கி எதிரில், செவ்வாயன்று கண்டன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் பி.கலைச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. அபிமன்னன் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் நிறைவுரையாற்றினார். இதில், 100 பெண்கள் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் பட்டாணிக் கடைத் தெருவில் இருந்து, இந்தியன் வங்கி வரை ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த வருவாய் துறையினர், காவல் துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோரிக்கை மனுக்களைப் பெற்று, பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மாத காலத்திற்குள் சம்பள பாக்கி வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. நூறு நாள் வேலைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். நூறு நாள் வேலையை 200 நாட்களாகவும்ம், கூலியை ரூ.600 ரூபாய் ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். வார்டு வாரியாக இல்லாமல் வேலைக்கு வரும் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். ஜாப் கார்டு இல்லாதவர்களுக்கு ஜாப் கார்டு வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் கட்டாயமாக வேலை வழங்க வேண்டும். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி பகுதியில் நூறு நாள் வேலையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
சமயபுரம் மாரியம்மனுக்கு 25 ஆண்டுகளாக பூச்செரிதல் விழா நடத்தும் இஸ்லாமியர்
திருச்சி கோட்டை பில்லுக்கார தெரு ஸ்ரீ சங்கவி ஆண்டவர் ஆலயத்தின் முன் அல்லிமால் தெரு, ஸ்வான் கார தெரு, பில்லுக்கார தெரு நண்பர்கள் குழு சார்பில், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு 25 ஆம் ஆண்டு 3 ஆவது வார பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன் தெருக்களில் உலா வந்தது. முன்னதாக 25 ஆம் ஆண்டு பூச்சொரிதலை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சேலை வழங்கப்பட்டது. மதியம் நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.25 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த பூச்சொரிதல் விழாவினை, இஸ்லாமியரான அபுபக்கர் என்னும் சேட்டான், அப்பகுதி நண்பர்கள் குழு இணைந்து ஏற்பாடு செய்து இருந்தார்.
நீதிமன்ற அவதூறு வழக்கில் எச்.ராஜா ஆஜர்
நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில், பாஜக மூத்த தலைவர் எச். ராஜா புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார். கடந்த 2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, உயர் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் அவதூறாக பேசினார். இதனைத் தொடர்ந்து, திருமயம் காவல்துறையினர் எச்.ராஜா உள்ளிட்ட 20 பேர் மீது 8 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எச். ராஜா உள்ளிட்டவர்கள் மீது, குற்றப் பத்திரிகையை திருமயம் காவல்துறையினர் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் திருமயம் நீதிமன்றத்தில் ஏற்கனவே இரண்டு முறை ராஜா ஆஜராகி இருந்த நிலையில், வழக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், வழக்கு திங்களன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேரில் ஆஜரானார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.