சுயதொழில் தொடங்க கடன் வழங்குக! மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை
தஞ்சாவூர், ஜூலை, 18- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் ஒன்றிய 2 ஆவது மாநாடு, மதுக்கூர் எம்.எஸ்.கே திருமண மண்டபத்தில், ஒன்றியத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. சங்கக் கொடியினை ஒன்றியக்குழு உறுப்பினர் வி.கலைச்செல்வி ஏற்றி வைத்தார். எஸ்.ஜெயமாகீர்த்தி வரவேற்றார். ஏ.ஸ்ரீதேவி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பழ. அன்புமணி துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் சி.ஏ.சந்திரபிரகாஷ் வேலை அறிக்கை வாசித்தார். ஒன்றிய பொருளாளர் ஆர்.பன்னீர்செல்வம் வரவு செலவு அறிக்கை வாசித்தார். மாவட்டச் செயலாளர் பி.எம். இளங்கோவன் நிறைவுரையாற்றினார். ஆர்.மதியழகன் நன்றி கூறினார். திருவோணம் ஒன்றியத் தலைவர் துரைராஜ், பட்டுக்கோட்டை ஒன்றியப் பொறுப்பாளர்கள் மணிகண்டன், குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டில், 21 பேர் கொண்ட புதிய ஒன்றியக் குழு தேர்வு செய்யப்பட்டது. இதில், ஒன்றியத் தலைவராக எம்.பாலசுப்பிரமணியன், செயலாளராக சி.ஏ. சந்திரப்பிரகாஷ், பொருளாளராக ஆர். பன்னீர்செல்வம், துணைத் தலைவர்களாக சி.ஸ்டாலின், ஜி.ராஜலட்சுமி, வி.கலைச்செல்வி, ஒன்றிய துணைச் செயலாளர்களாக இ.துர்கா, எஸ். ஜெயமாகீர்த்தி, எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் ஆந்திரா மாநிலத்தைப் போன்று, தமிழ்நாட்டிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.6,000, ரூ.10,000, ரூ.15,000 என உயர்த்தி வழங்கிட வேண்டும். மாற்றுத் திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை அந்தியோதயா அன்னயோஜனா (ஏஏஒய்) திட்ட குடும்ப அட்டையாக மாற்றி, மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி வழங்கிட வேண்டும். தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு, சுய தொழில் தொடங்கிட வங்கிகளில் கடன் வழங்கிட வேண்டும். ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் நூறு நாள் வேலையை தவறாமல் வழங்கிட வேண்டும். அதோடு மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை என்பதை முறைப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.