கருணை அடிப்படையில் வேலை வழங்குக! நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
அரியலூர், ஆக. 19- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் அரக்க முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். உயிர் நீத்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.பைரவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.எஸ்.ஆர். அம்பேத்கர், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். திருச்சிராப்பள்ளி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் திருச்சி கோட்டம் சார்பில், திங்களன்று டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் அரக்க முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். கோட்ட துணைத் தலைவர் மலர்மன்னன் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் துவக்க உரையாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் இளங்கோவன், கோட்டத் துணைத் தலைவர் கோவிந்தராஜன், கோட்ட இணைச் செயலாளர்கள் சௌந்தர், தர்மராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் நவநீதன், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நிர்வாகி சுந்தர்ராஜன், சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், அரசு ஊழியர் சங்க திருச்சி 1 ஆவது வட்டக் கிளைத் தலைவர் சுரேஷ் பிரபு ஆகியோர் பேசினர். மாவட்டப் பொருளாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார். கரூர் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட குழு சார்பில், அரக்க முக முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நெடுஞ்சாலைத்துறை கரூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.செவந்திலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல். பாலசுப்பிரமணி, கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் வ.கோபி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.