tamilnadu

img

பெருமைக்குரியது! பெருமகிழ்வைத் தருவது!! - என்.சீனிவாசன்

ஊடக உலகில் உண்மையின் பே ரொளி உழக்கும் மக்களின் ஒப்பற்ற துணைவன்  60 ஆண்டுகள் நிறைவடைந்து  61 ஆம் ஆண்டில்  வெற்றி நடை போடும் தீக்கதிர் இப்போது ஐந்தாவது பதிப்பி னை நெல்லையில் துவங்குவது பெருமைக் குரியது -  பெருமகிழ்வைத் தருகிறது. 1963-இல் துவங்கி மதுரையில் நிலை பெற்று 1993-இல் தலைநகர் சென்னையில் இரண்டாவது பதிப்பைக் கண்டது. மூன்றாம் பதிப்பு உழைப்பாளி மக்கள் நிறைந்த கோவையில் 2007இல் துவங்கப்பட்டது. சென்னை பதிப்பை துவக்கி வைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செய லாளர் அருமைத்தலைவர் இஎம்எஸ் அவர்கள் டெல்டா பகுதிக்கு ஒரு பதிப்பு தேவை என வலியுறுத்தினார். அந்த அடிப்படையில் திருச்சி பதிப்பு 2010இல் நான்காம் பதிப்பாக துவங்கப்பட்டது. தமிழ்நாடு உழைக்கும் மக்களின் பேராதரவோடு தீக்கதிர் இன்று ஐந்தாம் பதிப்பைக் காண்பது மகத்தான முன்னேற்றம் ஆகும். திமுக தலைவராகவும் தமிழ்நாடு முதல்வராகவும் வரலாறு படைத்த டாக்டர் கலைஞர் அவர்களிடம் செய்தி யாளர்கள் பத்திரிகை நடத்துவது பற்றி  கேள்வி கேட்டனர். பத்திரிகை நடத்துவது கடினமான பணி . அதிலும் அரசியல் கட்சி பத்திரிகை நடத்துவது மிகவும் கடினமான பணி என்று அவர் மிகச்சரியாகச் சுட்டிக்காட்டினார். எவ்வளவு அனுபவம் நிறைந்த சொற்கள்! தீக்கதிரும் அதற்கு விதிவிலக்கல்ல. எண்ணற்ற சிரமங்களைச் சந்தித்து, சமாளித்துத்தான் இன்றைய நிலையை எட்டியிருக்கிறது. துவக்க ஆண்டுகளில் தீக்கதிர் சந்தித்த நெருக்கடிகள் சாதாரணமானவை அல்ல. தொழி லாளி வர்க்கத்தின் தொடர்ச்சியான மகத்தான ஆதரவுதான் அவற்றை வென்று முன்னேறத் துணை நின்றது. அரசியல் நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. நெருக்கடி நிலை காலத்தில் அச்சிடுவதற்கு முன்னால் இரண்டு முறை தணிக்கைக்கு ஆளாக்கப்பட்டது தீக்கதிர் என்பது வரலாறு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமை யும், கட்சி ஊழியர்களும் தீக்கதிரை பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்று தொடர்ந்து காட்டிய  மிகச் சிறப்பான அக்கறையே, இந்த வெற்றிப் பயணத்தின் அடிப்படை என்றால் சற்றும் மிகை அல்ல. கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என்ற முறையில் மாநில செயற்குழு, மாநிலக்குழு, மாவட்டக் குழுக்கள், இடைக்குழுக்கள், கிளைகள் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது தீக்கதிரை பாதுகாக்கவும் முன்னேற்றவும், புதிய பதிப்புகளைக் காணவும் உறுதுணையாக உள்ளது.மென்மேலும் இது பலப்படுவது உறுதி. நாட்டின் இன்றைய அரசியல் நிலை மிக மோசமாக உள்ளது.

ஒன்றிய அரசின் செயல்பாடுகள் ஜனநாயக உரிமைகளை அன்றாடம் அழித்துக்கொண்டிருக்கின்றன. அரசியல் சட்டத்தை அழித்து விட்டு. மனு நீதி யை சட்டமாக கொண்டு வர முயற்சிக்கின்றனர். மதம், சாதி என்பவை நீடிக்கவும், அவற்றை பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்தவும் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். இவர்களை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்துவது இன்று தலையாய கடமையாக உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 2024-இல்அதை சாதிக்கப்போவது உறுதி. இப்பணியில் தீக்கதிரின் பங்களிப்பு மகத்தானது. அன்றாட அரசியல் நிகழ்வுகளை நமது கட்சியின்  பார்வையில் மக்களிடம் கொண்டு செல்லும் முக்கியமான பணியை தீக்கதிர் ஆற்றிவருகிறது. விரிவான பகுதி மக்களிடம் கொண்டு செல்லும் பணி நம்முன் உள்ளது. நெல்லை பதிப்பு இப்பணிக்கு மேலும் வலுசேர்க்கும். தமிழ்நாட்டின் தென் கோடி மாவட்டங்களில் மக்களுக்கு நமது செய்திகளை அன்றாடம் கொண்டு சேர்க்கும் அரிய பணியை தீக்கதிர் சிறப்பாக ஆற்றும். தீக்கதிர் விற்பனை மாநிலக்குழுவின் முயற்சியால் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இன்னும் உயரும்.அதன் பிரதிபலிப்பே ஐந்தாம் பதிப்பு. தீக்கதிரின் வளர்ச்சியும் கட்சியின் வளர்ச்சியும் இணைபிரியாதது. இரண்டும் சேர்ந்தே இயங்கும். நாட்டில் இன்றைக்குள்ள நெருக்கடிகளுக்கு கம்யூனிஸ்டுகள் மட்டுமே தீர்வளிக்க முடியும். முதலாளித்துவத்தால் முடியாது. அப்படிப்பட்ட தீர்வை நோக்கிய பாதையில் மேலும் மேலும் கட்சியை வளர்க்கவும், தீக்கதிரை வளர்க்கவும் இந்நேரத்தில் உறுதி ஏற்பது நம் ஒவ்வொருவரின் கடமை.