சிஐடியு ஆட்டோ சங்கத்தினரை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர், ஏப்.19- பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு, சிஐடியு ஆட்டோ சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பெரம்பலூர் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால் சி.என்.ஜி ஆட்டோக்களுக்கு புதிய அனுமதிச்சீட்டு வழங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவிடம் மனு கொடுத்ததற்காக சிஐடியு சங்கத்தை சேர்ந்தவர்களை அடியாட்களை வைத்து மிரட்டி, அநாகரிகமாக பேசியவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் ஆட்டோக்களை சி.என்.ஜி ஆக மாற்றம் செய்திட அரசு மானியம் வழங்கிடவும், ஆன்லைன் அபராதத்திலிருந்து ஆட்டோக்களுக்கு விதிவிலக்கு அளித்திட வேண்டும். சி.என்.ஜி ஆட்டோக்களுக்கு புதிய அனுமதிச்சீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகள் குறித்து, சிஐடியு ஆட்டோ சங்க நிர்வாகிகள் எம். சிவாஜி, ஏ.ரெங்கநாதன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் ஆகியோர் விளக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ மற்றும் அனைத்து வகையான வாகன ஓட்டுநர்கள் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.