tamilnadu

img

அலைகடலென ஆர்ப்பரித்த செந்தொண்டர்களால் சிவப்பான வைகை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாட்டையொட்டி மதுரையில் புதனன்று செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து  பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் (என். நன்மாறன் திடல்)அருகில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது.    
கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளரும் வரவேற்புக்குழுச் செயலாளருமான மா.கணேசன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தை நடிகை ரோகினி துவக்கி வைத்துப் பேசினார். புறநகர் மாவட்டச் செயலாளரும் வரவேற்புக்குழு பொருளாளருமான கே.ராஜேந்திரன் வரவேற்றார். அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார். அவரது ஆங்கில உரையை மாநிலக்குழு உறுப்பினரும்  தீக்கதிர் மதுரைப் பதிப்பு பொறுப்பாசிரியருமான எஸ்.பி.ராஜேந்திரன் தமிழாக்கம் செய்தார்.
மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, அ.சவுந்திரராசன்,  மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர்  இரா.முத்தரசன் வாழ்த்திப் பேசினார்.  மாநிலக்குழு உறுப்பினர் விஜயராஜன் நன்றி கூறினார்.
அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் எம்.ஏ.பேபி, ஜி.இராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் 23-ஆவது மாநில மாநாட்டு லட்சிணையை உருவாக்கிய கன்னியாகுமரி மாவட்டத் தக்கலையைச் சேர்ந்த லெனின்பாபு-விற்கு பொதுச் செயலாளர் சீத்தாராம்  யெச்சூரி மார்க்ஸ் சிலையை பரிசளித்துப் பாராட்டினார்.
மாநாட்டிற்கான ஓவியம் உள்ளிட்ட வடிவமைப்புப் பணிகள், பொதுக்கூட்ட மேடையை அழகுற வடிவமைத்த ஓவியக் கலைஞர்கள் வெண்புறா, ரஹ்மத், பாண்டியராஜன் ஆகியோர் பாராட்டப்பெற்றனர்.
லீலாவாதி படைப்பிரிவும் -சிவப்பு ஹிஜாப்-பும்
ஹிஜாப் அணியக்கூடாது என்று சொல்லும் பாஜக கூட்டத்திற்கு எதிராக சிவப்பு நிறத்தில் மதுரை தியாகி லீலாவதி படைப்பிரிவில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம்கள்.
கட்சியின் 23-ஆவது மாநில மாநாட்டையொட்டி நடைபெற்ற செந்தொண்டர் அணிவகுப்பை வரவேற்றும், மாநாட்டை வாழ்த்தியும் சிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன் தலைமையில் முழக்கமிட்ட தோழர்கள்.
மதுரை மாநகர் ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் சம்மேளனத் தலைவர்  சிவாஜி தலைமையில் செந்தொண்டர்களுக்கு குளிர்பானம் வழங்கப்பட்டது. அரசு போக்குவரத்து இடைக்கமிட்டியின் சார்பிலும் குளிர்பானம், தர்பூசணி வழங்கப்பட்டது.
முன்னதாக புதுகை பூபாளம், காம்ரேட் டாக்கீஸ், குமரி தப்பாட்ட கலைக்குழு ஆகியோரின் கலை நிகழ்வுகள் நடைபெற்றது.