tamilnadu

கால்நடைகள் மேய்க்க தடை: அரசு மேல் முறையீடு செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,மார்ச் 5- வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க நீதிமன்றம் வித்தித்துள்ள தடை மக்களின் மேய்ச்சல் உரிமையைப் பாதுகாக்கவும், வனஉரிமைச் சட்டம் எதிரானது என்பதால் தமிழ்நாடு அரசே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மலைமாடுகள் (நாட்டு மாடு) என்ற இனம் காலங்காலமாக மலைகளில் மேய்வதும், அதன் சாணம் மலைகளில் பல்வேறு தாவரங்களுக்கு எருவாக பயன்பட்டு வந்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இனி தமிழகம் முழுவதும் மலைகளில் மாடுகளை மேய்க்கக்கூடாது என்று தடைவிதித்து தீர்ப்பளித்துள்ளது. வனஉரிமைச்சட்டம் 2006-இல் மேய்ச்சல் உரிமையை மக்களுக்கு வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தங்களின் சிந்தனையை ஆழமாக செலுத்தித்தான் தீர்ப்பளித்தார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஏனென்றால், மலைகளில் மேய்ந்த மாட்டை சமவெளிப் பகுதிகளில் மேயவிட்டால் பருவநிலை மாற்றம், போதுமான தீவனம் கிடைக்காதது போன்ற காரணங்களால் படிப்படியாக அழிந்து நாட்டு மாடு என்ற இனமே இல்லாமல் போகும். மேலும், ஜமீன் காலத்திற்கு முன்பிருந்தே அனுமதி பெற்று மலைகளில் மாடுகளை மக்கள் மேய்த்து வந்திருக்கின்றனர். இப்போது திடீரென்று வன வளத்திற்கு இதனால் ஆபத்து என்ற எந்த ஆய்வின் அடிப்படையில் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது என்று தெரியவில்லை. ஆடு, மாடு, குதிரைகள் போன்றவற்றை மலைகளில் மேய்த்து வரும் மக்களின் பாரம்பரிய உரிமையை பறிப்பதாக இந்த தீர்ப்பு உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பிரச்சனைகள் உருவாகும் என்பதை கவனப்படுத்துகிறோம்.

வனம் என்பது வனவிலங்குகளுக்கு மட்டும் உரியதல்ல! மாறாக வனத்தை சார்ந்து வாழும் மக்கள், மற்ற உயிரினங்கள், மக்களின் வாழ்வாதாரம் அனைத்தையும் உள்ளடக்கியது என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள தவறி இருக்கிறது. மேலும் தமிழர்களின் பண்பாட்டையும், வலிமையையும் வெளிப்படுத்தும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் இந்த மலைமாடுகள் இனத்திலிருந்தே உருவாக்கப்படுகிறது. படிப்படியாக ஜல்லிக்கட்டு காளைகள் என்பதும் அழிந்துபோகும். ஏற்கனவே, மேகமலையில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மக்களை வெளியேற்ற வேண்டுமென்ற சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பினை இதே நீதிமன்றம் வழங்கி அதற்கெதிரான வழக்கு நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டுகிறோம்.

வனத்துறை தரப்பில் கூறப்படும் தவறான தகவல்களை வேதவாக்காக ஏற்று நீதிபதிகள் இத்தகைய தீர்ப்பினை கண்ணை மூடிக்கொண்டு வழங்குகின்றனர். மக்களின் நலன்களை பாதுகாக்க வேண்டிய அரசு தரப்பு வழக்கறிஞர் செயல்படுகிறாரா என்பதே தெரியவில்லை. எனவே, இந்த தீர்ப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். நாட்டு மாட்டு இனத்தை பாதுகாக்கவும், மக்களின் மேய்ச்சல் உரிமையைப் பாதுகாக்கவும், வனஉரிமைச் சட்டம் 2006-இல் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை நிலைநாட்டவும் தமிழ்நாடு அரசே இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.