கொள்ளிடம், டிச.31 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி ராஜேஸ்வரி, கணிதத் துறையில் மூன்றாம் ஆண்டு பட்ட வகுப்பு படித்து வரும் அபி மற்றும் அனிதா ஆகிய 3 மாணவிகளும் கடந்த டிச. 22 ஆம் தேதி முதல் டிச.26 ஆம் தேதி வரை பாண்டிச்சேரியில் நடைபெற்ற நெட் பால் போட்டியில் அகில இந்திய அளவில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை வென்று பதக்கம் பெற்றுள்ளனர். இந்த போட்டியில் 34 மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். அகில இந்திய அளவில் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்ற மேற்கண்ட மூன்று மாணவிகளையும் வியாழனன்று புத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரி முதல்வர் லட்சுமி தலைமையில் அனைத்துத் துறை ஆசிரியர்கள், மாணவர்கள் கல்லூரி வரை வரிசையாக நின்று மலர் தூவி வரவேற்பளித்தனர். கல்லூரி முதல்வர் லட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன், புத்தூர் வியாபாரிகள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.