ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு, ஜீவா நகர் 1 - வது தெரு சந்திப்பில் ஞாயிறன்று சரக்கு ஆட்டோ மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு ஜீவா நகர் அருகில் உள்ள நான்கு ரோடு சந்திப்பில் கடந்த ஞாயிறன்று அசோகன், சுப்புராம் என்ற இருவர் சரக்கு வாகனஆட்டோ மோதி உயிரிழந்துள்ளார்கள்.
இந்நிலையில் புதனன்று அப்பகுதியில் ஒரு இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான விபத்துக் காட்சி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறுகையில்.
இங்கு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக காவல் துறையினர் மூலம் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் செயல்படாமல் உள்ளது. இந்த சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் கோபுரமும் அமைக்கப்பட்டு அதுவும் காட்சிப் பொருளாக உள்ளது. காவல்துறையினர் அந்த கோபுரத்தில் வண்ணம் அடிப்பதற்கும் விளம்பரதாரர் விளம்பரம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் .
மேலும் இந்த பகுதியில் இரண்டு மதுபான கடைகள் இருப்பதாலும் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இரண்டு மாதம் முன்பு இவ்வளவு ஜன நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் குறிப்பாக கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் ஒரு நபரை உயிரோடு எரித்த நிகழ்வு நடந்துள்ளது. தொடர்ந்து இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது இந்த நிலையில் ஞாயிறன்று நடந்த விபத்து மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை நிர்வாகம் உடனடியாக கண்காணிப்பு கோபுரத்தில் போக்குவரத்து காவலர்களை நியமித்து விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செயல்படாமல் உள்ள சிக்னல்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இங்கே இருக்கும் டாஸ்மாக் கடைகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநகராட்சி நிர்வாகம் தெரு பகுதிகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சரி செய்து நான்கு புறமும் வேகத்தடைகளை அமைத்திட வேண்டும். மீண்டும் இதுபோன்ற கோர சம்பவங்கள் நடந்திடாத வண்ணம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.