tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு 8 மணி நேர  வேலையை உறுதிப்படுத்தக்கோரி மனு

திருச்சிராப்பள்ளி, ஜுன் 12-  சிஐடியு திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாறன், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 3-ன் உதவி ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.  அவர் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தூய்மை பணியை கடந்த 2023 ஜுன் மாதம் முதல் எஸ்.ஆர். யுனிடெட் இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் (வேதா) நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது. இதில், தூய்மை பணியாளர்கள் அனைவரும் அர்ப்பணிப்போடு பணிபுரிந்து வருகின்றனர். மண்டலம் மூன்றில் உள்ள நுண் உரம் கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் 8 மணி நேரம் கடந்து, கட்டாய வேலை வாங்கப்படுகின்றனர். காலை 6 மணிக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் 8 மணி நேரம் கடந்தும் வேலை செய்வதால் உடல்நிலையும் குடும்ப சூழ்நிலையும் பாதிக்கப்படுகிறது.  எனவே, தொழிலாளர் வாழ்நிலையை பாதுகாக்க 8 மணி நேர வேலை சட்டத்தை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு  கேட்டுக்கொள்கிறோம் என அவர் அதில் கூறியிருந்தார். உதவி ஆணையரிடம் மனுவை கொடுத்தபோது சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

பட்டுக்கோட்டையில்  4.7 கிலோ கஞ்சா  ரூ.4.20 ரொக்கம் பறிமுதல்: மூவர் கைது 

தஞ்சாவூர், ஜுன் 12-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகர காவல்துறையினருக்கு, புறவழிச்சாலை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது என ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பட்டுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டுக்கோட்டை புறவழிச்சாலை அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த ஒரு காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் விற்பனைக்காக 4 கிலோ 700 கிராம் கொண்ட கஞ்சா பாக்கெட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து காரில் வந்த 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.   அதில், அவர்கள் திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் கீழவாடியக்காடு பகுதியை சேர்ந்த மகேஷ் (33), மதுக்கூர் பகுதியை சேர்ந்த விவேக் (34), பட்டுக்கோட்டை பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த அன்வர் பாட்ஷா (29) எனத் தெரிய வந்தது. மேலும் பட்டுக்கோட்டை பகுதியில் விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பட்டுக்கோட்டை நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மகேஷ் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 கிலோ 700 கிராம் கஞ்சா, ரூ.4.20 லட்சம் பணம் மற்றும் ஒரு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.