tamilnadu

போட்டித்தேர்வுகளுக்கு அனுமதி- தமிழக அரசு

சென்னை,ஜன.6- முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளுக்கு  செல்லும் தேர்வர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவலை தடுப்பதற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட ஞாயிற்றுக்கிழமையில் மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி/ டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் தேர்வுகள், மற்ற போட்டித் தேர்வுகள், நிறுவனங்களில் நடைபெறும் வேலைவாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க செல்லும்  இளைஞர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு அல்லது நிறுவனங்களின் அழைப்பு கடிதம்  ஆகியவற்றை காண்பித்து தங்களது பயணங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படு கிறது. இதுபோன்ற முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத்  தேர்வுகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.