மத்திய உணவு தானிய சேமிப்பு குடோனில் பூச்சிகள் தொல்லைக்கு நிரந்தர தீர்வு: துரை வைகோ எம்.பி., பேட்டி
ருச்சிராப்பள்ளி, மே 11- திருச்சி எம்.பி. துரை வைகோ தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் ரயில்வே துறை அலுவலர்களுடன் ஆய்வுகள் மேற்கொண்டார். ஆய்வின் போது, பொன்னுரங்கபுரம், திருவானைக்காவல், திருச்சி மாநகராட்சியின் 6-ஆவது வார்டு ஆகிய பகுதிகளில் உள்ள பழுதடைந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் மற்றும் பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். கொள்ளிடம் ஒய் ரோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக அதிகாரிகளுடன் இணைந்து களஆய்வு மேற்கொண்ட எம்.பி. துரை வைகோ, திட்டத்துக்கான வரைபடங்களுடன் திட்ட பணிகள் குறித்த விவரங்களையும், புதிய சாலை தொடங்குமிடம், சர்வீஸ் சாலையின் அமைப்பு, சுரங்கப்பாதையின் அகலம், உயரம் குறித்த தகவல்களை கேட்டறிந்தார். பின்னர், சஞ்சீவி நகர் பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் குறித்து அப்பகுதி மக்கள், அலுவலர்களுடன் கலந்துரையாடினார். இதற்கான பணிகளை மேற்கொள்வதாக அவர் உறுதியளித்தார். பின்னர் திருச்சி எம்.பி. அலுவலகத்தில் எம்.பி துரை வைகோ,நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சஞ்சீவி நகர் மற்றும் திருவானைக்கோவில் ஒய் ரோடு ஆகிய இடங்களில் சர்வீஸ் ரோடு அமைய உள்ள தெளிவான வரைபடத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ள சர்வீஸ் ரோடு, அதிகபட்சமாக 18 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி, காஜாமலை ஆர்.பி.எஃப் அருகில், மத்திய அரசுக்கு சொந்தமான மத்திய உணவு சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த உணவு சேமிப்பு கிடங்கிலிருந்து வெளிவரும் பூச்சிகளால் அப்பகுதியை சுற்றி இருக்கும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு சங்கங்கள் என்னிடம் கோரிக்கை வைத்தன. இதையடுத்து மத்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு அதிகாரிகளுடன் பேசி, சி.டபுள்யூ.சி குடோனில் ஆய்வு நடத்தினேன். அப்போது குடோனில் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும், லாரிகள் லோடு ஏற்றி இறக்கும்போது அருகில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் பிரத்யேக பார்க்கிங் வசதிகள் செய்து தரவும், ஜுன் மற்றும் ஜூலை மாதங்களில் உணவு தானியங்களில் இருந்து வெளிவரும் பூச்சிகளை கட்டுப்படுத்த பெர்டிலைசர் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என மத்திய உணவு தானிய சேமிப்பு கிடங்கு அதிகாரிகள் உறுதி அளித்தனர். இவற்றில் எதையெல்லாம் உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர முடியுமோ அதையெல்லாம் செய்து தர அதிகாரிகள் தயாராக உள்ளனர். நானும் இவற்றை தொடர்ந்து கண்காணித்து மக்கள் சிரமத்தை குறைப்பேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ் மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.