நாமக்கல், ஜூலை 16- பெரியார் பல்கலைக்கழக தேர்வில் வினாத்தாளில் தமிழ்நாட்டில் தாழ்ந்த ஜாதி யார்? என்கிற கேள்வி தமிழ்ச்சமூகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இத்தகைய போக்கை கண்டித்து நாமக்கல் மாவட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் வினாத்தாள் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில், சாதி ரீதியான கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பெரியார் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய கல்லூரிகளில் வரலாற்றுத்துறை இளங்கலை இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத்தேர்வில் வினாத்தாளில் 11 ஆவது கேள்வியாக, `தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது?’ என்று கேட்கப்பட்ட கேள்வி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியது.
பெரியார் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகத்தில் இத்தகைய கேள்வியை திட்டமிட்டே வலதுசாரி சிந்தனையாளர்கள் இதுபோன்ற கேள்விகளை புகுத்தியுள்ளனர் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்றே பல கேள்விகள் முரண்பாடாகவும், தவறான கேள்விகளாகவும் உள்ளதாக இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர். சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் இத்தகைய நடவடிக்கையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் சங்க நாமக்கல் மாவட்டக் குழுவின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.கோகுல் தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ம. தேன்மொழி, செயலாளர் தே.சரவணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். முன்னதாக சேலம் பெரியார் பல்கலைக் கழகம் வடிவமைத்த வினாத்தாள்களின் நகல்களை எரித்து முழக்கங்களை எழுப்பி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.