ஸ்மார்ட் மீட்டருக்கு எதிராக மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்
மன்னார்குடி, ஏப்.20- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், ஸ்மார்ட் மீட்டருக்கு எதிரான மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியில் சனிக்கிழமை பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மன்னார்குடி தேரடியில் துவங்கி பந்தலடியில் முடிவடைந்த இயக்கத்தில், துண்டு பிரசுரங்கள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டன. மின் ஊழியர் மத்திய அமைப்பின் திருவாரூர் திட்ட தலைவர் எஸ். சகாயம் திட்ட செயலாளர் கே. ராஜேந்திரன், மன்னார்குடி கோட்ட தலைவர் எஸ்.மோகனசுந்தரம், கோட்டச் செயலாளர் ஜி. வீரபாண்டியன் துணைச் செயலாளர் எஸ். ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் கே. துரைராஜ் மற்றும் சிஐடியு தலைவர்கள் பி. கோபாலகிருஷ்ணன், ஜி.ரெகுபதி, டி. ஜெகதீசன், ஜி. முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரச்சார உரையாற்றினர்.