tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கமல்ஹாசனுடன் உதயநிதி சந்திப்பு


சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழனன்று (பிப்.13) நேரில் சந்தித்து பேசினார். ஜூலை மாதம் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.


அண்ணாமலைக்கு பதிலடி கிடைக்கும்


சென்னை: அண்ணாமலையின் ஆணவப் பேச்சுக்கு 2026-ஆம் ஆண்டில் நடைபெறும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தேர்தலில் அண்ணாமலை எங்கு போட்டியிட்டாலும் தி.மு.கவின் தொண்டனை நிற்க வைத்து தோற்கடிப்போம் என்று சென்னையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்தார்.


இ.டி. பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு


சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்படத் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, கடந்த ஆண்டு ஜூன் 26 அன்று கைது செய்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


பெண் நடத்துநர் : நிபந்தனை தளர்வு


சென்னை : பெண் நடத்துநர் அதிக எண்ணிக்கையில் தேர்வாவதை உறுதி செய்யும் வகையில் புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பேருந்து நடத்துநர் பணிக்கு தேர்வாகும் பெண்களுக்கான உயரம், 160 செ.மீட்டரில் இருந்து 150 செ.மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், இரு பாலினத்தவருக்கும் குறைந்தபட்ச எடை 45 கிலோ என பொதுச்சேவை விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் புகார் அளிக்கலாம்


சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், பாதுகாப்பான சூழல்கள், அச்சுறுத்தல்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்க 14417 என்ற உதவி மைய எண்ணை அணுகலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புகார்கள் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெடிகுண்டு மிரட்டல்


சென்னை: சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள எழிலக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பிறகு, மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர். அதில், இந்த மிரட்டல் புரளி என தெரிய வந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் பாலாஜி என்பவர் மிரட்டல் விடுத்ததாக தெரிய வந்தது.