புதுதில்லி, டிச. 20 - அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்; அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மோடி நீக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்தியா கூட்டணி கட்சிகளும் நாடாளு மன்ற வளாகத்தில் தொடர் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் மீது பாஜக பொய்ப்பழி அம்பேத்கர் படங்களை ஏந்திய படியும், ஜெய்பீம் முழக்கங்களை எழுப்பிய படியும் பேரணி நடத்திய இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வியாழனன்று நாடாளுமன்றத்திற்குள் செல்ல முயன்றபோது, அங்கிருந்த பாஜக-வினர் தடுத்து தாக்குதலில் ஈடு பட்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கேவையும் கீழே தள்ளி விட்டனர். ஆனால், காங்கிரசார் தான் தங்களைத் தாக்கியதாகவும், அதில், பாஜக எம்.பி. பிரதாப் சாரங்கி மண்டை உடைந்ததுடன், மற்றொரு பாஜக எம்.பி. முகேஷ் ராஜ்புத் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பழிபோட்டனர். மேலும், ராகுல் காந்தி தான் பாஜக எம்.பி.க்களைத் தள்ளி விட்டு காயம் ஏற்படுத்தியதாகவும், பாஜக பெண் எம்.பி.க்களிடம் ராகுல் காந்தி மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட தாகவும் கூறி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார்.
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளில் எப்ஐஆர்
நாடாளுமன்ற காவல்நிலையத்தி லும் புகார் அளித்து, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது மோடி அரசு 6 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை யன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, காங்கிரஸ் எம்.பி.க்கள் விஜய் சவுக் பகுதியில் இருந்து பதாகைகளுடன் பேரணியாக புறப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தை வந்தடைந்தனர். பின்னர் அமித் ஷா பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தினர். காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் இந்தப் போராட்டத்திற்குப் போட்டியாக, பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டத்தை தொடங்கினர்
இந்தியா கூட்டணி வெள்ளியன்றும் போராட்டம்
அதன்பிறகு நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் கூடின. அப்போது, மக்களவையில் ஜெய்பீம் என்றும், அமித் ஷா பதவி விலகக் கோரியும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர். இதற்குப் போட்டிக்கு, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி எம்.பி.க் கள், ராகுல் காந்திக்கு எதிராக முழக்க மிட்டனர். இதனால் மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. எனினும் இந்த அமளிக்கு இடையிலேயே, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காலை 11.10 மணிக்கே மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டது. நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு இதேபோல மாநிலங்களவை யிலும் அமித் ஷா விவகாரமே புயலைக் கிளப்பியது. காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி களை சேர்ந்த எம்.பி.க்கள் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும் என்று எதிராக முழக்க மிட்டனர். இதனால் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மதியம் 12 மணி வரை மாநிலங்களவையை ஒத்திவைத்தார். அவை நட வடிக்கைகள் பிற்பகலில் மீண்டும் கூடிய நிலையில், அப்போதும் எதிர்க்கட்சிகள் மற்றும் பாஜக கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட தால், நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைப்பதற்கான தீர்மானம் நிறை வேற்றப்பட்டவுடன் மாநிலங்களவை யும் காலவரையின்றி ஒத்திவைக்கப் பட்டது.
சபாநாயகரின் தேநீர் விருந்தை புறக்கணித்த இந்தியா கூட்டணி!
நவம்பர் 25 அன்று துவங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர், டிசம்பர் 20-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இதையொட்டி மக்களவைத் தலைவர் அளித்த தேநீர் விருந்தை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்தனர். நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்தபிறகு எம்.பி.க்களுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமையன்றும் கூட்டத்தொடர் முடிந்த பிறகு தேநீர் விருந்துக்காக அனைத்து எம்.பி.க்களையும் அழைத்திருந்தார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இதில் கலந்துகொள்ளவில்லை. அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மக்களவைத் தலைவரின் தேநீர் விருந்தை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யும் போது இதுபோன்ற தேநீர் விருந்தில் கலந்துகொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்றும் எங்களுக்கு அவையில் பேச வாய்ப்புகூட வழங்க வில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.