பாரிஸ், ஜூலை 9- உடனடியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் 2030 ஆம் ஆண்டில் 8 கோடிக்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் தங்கள் கல்வி நிலையங்களில் இருந்து வெளியே நிற்க வேண்டிய அவல நிலை ஏற்படும் என்று ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு(யுனெஸ்கோ) எச்சரித்துள்ளது. வளர்ச்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான இலக்குகள் ஒவ்வொரு நாடுகளுக்கும் உள்ளது. தங்களால் எத்தகைய இலக்குகளை அடைய முடியும் என அந்தந்த நாடுகளே தீர்மானித்து நிர்ணயித்துக் கொண்டுள்ளன. இதில் தரமான கல்வியை வரும் 2030க்குள் தர வேண்டும் என்பதும் ஒரு இலக்காக இருக்கிறது. யுனெஸ்கோவின் ஆய்வறிக்கையின்படி, சராசரியாக ஆறு நாடுகளில் ஒரு நாடுதான் இந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அந்த நாடுகள் மட்டும்தான் இலக்கை எட்ட வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
தரமான கல்வியின் ஒருபகுதியாக, தொடக்கப்பள்ளிப் படிப்பை ஒரு மாணவர் நிறைவு செய்யும்போது அடிப்படையான வாசிப்புத் திறன் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வாசிப்புத்திறன் குறித்து நாடுகள் உற்சாகமான அறிக்கையைத் தந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகளில் கிட்டத்தட்ட 90 விழுக்காடு நாடுகள், வாசிப்புத்திறனில் வளர்ச்சியைக் காண முடியும் என்கிறார்கள். கடந்த ஏழு ஆண்டுகளில் இதற்கான அறிகுறிகளைக் காண முடிந்துள்ளது என்று அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன. அடிப்படை வாசிப்புத் திறன் என்பது 2015 ஆம் ஆண்டில் 51 விழுக்காடாக இருந்திருக்கிறது. 2030 ஆம் ஆண்டில் இந்தத் திறன் 67 விழுக்காடாக அதிகரித்து விடும் வாய்ப்பிருக்கிறது.
ஆனால், இடைநிலைக் கல்வியைப் பொறுத்தவரை கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்கள் ஏற்கனவே பெற்றிருந்த திறனையும் இழந்திருக்கிறார்கள். பெருந்தொற்றின் பாதிப்பு பொருளாதாரத்தின் மீது இருப்பதால், கல்விக்கான நிதி ஒதுக்குவதிலும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இதனால் இடைநிலைக்கல்வியில் தரத்தை உத்தரவாதப்படுத்த முடியாத நிலை உள்ளது. வெறும் 15 விழுக்காடு நாடுகள் மட்டும்தான் தரத்தை எட்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ள யுனெஸ்கோவின் அதிகாரிகளில் ஒருவர், “வருமானம் குறைவான மற்றும் நடுத்தர வருமானத்தை ஈட்டும் நாடுகளில் 40 விழுக்காடு நாடுகள் கல்விக்கான நிதியைக் குறைத்துவிட்டன. பெருந்தொற்றின்போது சராசரியாக 13.5 விழுக்காடு நிதி குறைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் இவர்கள் செலவழித்த நிலையை இன்னும் எட்டவில்லை” என்று குறிப்பிடுகிறார். இந்த நிலையைச் சரிசெய்ய தீவிரமான, உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், 8 கோடியே 40 லட்சம் குழந்தைகள் கல்வி நிலையங்களில் இருந்து வெளியேறும் ஆபத்து உள்ளது என்று எச்சரிக்கிறார்கள்.