tamilnadu

img

10 லட்சம் பெண்கள்

நமது இந்தியா பெண் குழந்தைகள் வாழ தகுதியில்லாத இடமாக மாறிவருகின்றன. தொடர் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண் குழந்தைகளின் மீது நடத்தப்படும் வன்முறைகளும் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் அதிகரித்து வருகின்றன. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை யாரும் கண்டு கொள்வதில்லை. போதைப்பழக்கம் அதிகரித்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன.  இந்த நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 14முதல் 20 வரை போதை எதிர்ப்பு பிரச்சார இயக்கம், மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மணி நேரமும்... கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் உள்துறை அமைச்சர் தெரிவித்த தகவலின்படி தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில், ஒவ்வொரு மணி நேரமும் பெண்கள் மீது 49 குற்றங்கள் இழைக்கப்படுகின்றன.  2020ஆம் ஆண்டு மட்டும் 28,046 வழக்குகள் பதிவாகி இருந்தன. அது 2022ஆம் ஆண்டில் 31,677 வழக்குகளாக அதிகரித்துள்ளது.  பெண்கள் மீது சாதிரீதியான பாகுபாடு, குடும்பங்களில் நடத்தப்படும் வன்முறைகள் என்று மொத்தமாக 2020 ஆம் ஆண்டு மட்டும் 3,71,503 வழக்குகள் பதிவாகியுள்ளன. 2021ஆம் ஆண்டு 4,28,278 வழக்குகளாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 - 2021க்கு இடையே 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 10,61,648 பேர் காணாமல் போயுள்ளனர். அதே சமயம் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் 2,51,430 பேர் காணாமல் போய் உள்ளார்கள். அதிர்ச்சி அளிக்கும் இந்த பிரச்சனையில் ஒன்றிய மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.  மணிப்பூரில் குக்கி இன பழங்குடியின பெண்கள் பலர் முன்னிலையில் நிர்வாணமாக இழுத்துவரப் பட்டுள்ளனர். உலக அளவில் புகழ் பெற்ற மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாஜக எம்பி பாலியல் வன்முறை இழைத்தார் என்று தில்லியில் போராடினார்கள். இப்படி பாஜக ஆட்சியில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான தொடர் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைப் பற்றியெல்லாம் மோடி வாய் திறக்காமல் உள்ளார். தமிழ்நாட்டின் பாஜக தலைவர் அண்ணாமலையும், இதைப்பற்றி வாய் திறக்காமல் இங்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.  சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்ததால் பெண்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக அண்ணாமலை கூறுகிறார். 2014இல் மோடி ஆட்சிக்கு வந்தபோது ரூ.345 ஆக சிலிண்டர் விலை இருந்தது. அந்த அளவுக்கு குறைத்தால் பெண்கள் இன்னும் மகிழ்ச்சியடைவார்கள்.  தற்போதைய விலை குறைப்பு வெறும் கண்துடைப்பு மட்டுமே. கர்நாடகாவில் கேஸ் சிலிண்டர் விலை மிகப்பெரிய பேசுபொருளாக மாறி, தேர்தல் சமயத்தில் சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து வைத்திருந்தனர். இதன் விளைவாக பாஜகவின் பல அமைச்சர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 30 இடங்களில் டெபாசிட் இழந்தார்கள்.