tamilnadu

இராஜேந்திர பாலாஜி மீதான வழக்கு : ‘நீதிமன்றத்தைக் காட்டி நழுவிய ஒ.பன்னீர்செல்வம்

மதுரை, டிச.18- தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் விவகாரம் குறித்து செய்தியாளர் களிடம் பேசிய முன்னாள் துணை முதல்வர்  ஒ.பன்னீர்செல்வம் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகக் கூறி சாமர்த்தியமாக நழுவிக் கொண்டார் முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி விஜயநல்லதம்பி பல்வேறு நபர்களுக்கு அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடமும், அவரது உதவியாளரிடமும் ரூ.1 கோடியே 60 லட்சம் கொடுத்திருந்ததாகவும், மேலும் கட்சிப் பணிகளுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் என மொத்தம் ரூ.3 கோடியே 10 லட்சம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தப் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துவிட்டதாக கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி ஆகிய நான்கு பேர் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் நவம்பர் மாதம் 15-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை வெள்ளியன்று  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதற்கிடையில் வெள்ளிக்கிழமை காலை விருதுநகரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் பேசிய  முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார்.  இதைத் தொடர்ந்து மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை தேடிவருகின்றனர் அவரைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முன்னாள் துணை  முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரு மான ஒ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை மதுரை விமான நிலையத்தில் செய்தி யாளர்களைச் சந்தித்தார்.

அப்போது இராஜேந்திர பாலாஜி மீது உள்ள வழக்கு குறித்த கேள்விக்கு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.” எனக் கூறி பதில் சொல்லாமல் நழுவிக்கொண்டார். சமீபத்தில் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் நடந்த ரெய்டு குறித்து கருத்துத் தெரிவித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு பதிவு செய்வதாகக் கூறினர். மற்ற அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடந்தபோது கருத்து தெரிவித்த ஒ.பன்னீர்செல்வம் இராஜேந்திர பாலாஜி விவகாரம் குறித்து கருத்துச் சொல்ல மறுத்துவிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

திருநெல்வேலி பள்ளி விபத்து குறித்த கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், “பள்ளி மாணவர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து. பள்ளி மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார். பெண் குழந்தைகள் மீது நடை பெறும் பாலியல் தொந்தரவு குறித்த கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், “பெண்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மீது  பாலியல் குற்றச்சாட்டு அதிகரிப்பது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கிறேன்” என்றார்.  குடும்பத்தினரை  தொந்தரவு செய்யக் கூடாது இதற்கிடையில், இராஜேந்திர பாலாஜி யின் சகோதரி லட்சுமி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அதில், தனது மகன்கள் மற்றும் ஓட்டுநரை விசாரணைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் துன்புறுத்தியுள்ளனர் என தெரிவித்திருந்தார். இந்த மனுவைவிசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  நீதிபதி  சுவாமிநாதன், விசாரணை என்ற பெயரில் இராஜேந்திர பாலாஜி குடும்பத்தினருக்கு தொ ந்தரவு செய்யக் கூடாது.  குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை எப்படி வேண்டுமென்றாலும் தேடிக் கொள்ளுங்கள்.  தேவைப்பட்டால் முறைப்படி சம்மன்  அனுப்புங்கள்.  அதன்பின்பு குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.